பயங்கரம்.. 10ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த மாணவன்.. நடந்தது என்ன? கரூரில் பரபரப்பு!
கரூர்: கரூர் அருகே தரங்கம்பட்டியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவியை தனியே அழைத்து 12ஆம் வகுப்பு மாணவர் கழுத்தறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் மாணவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூரில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மாணவர் ஒருவரால் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கரூர் மாவட்டம் தரங்கம்பட்டி அருகே உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட மாணவி. அந்த மாணவியை 12ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர், தனியே அழைத்துள்ளார்.
இதனை நம்பி அந்த மாணவியும் 12ஆம் வகுப்பு மாணவர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அந்த இடத்தில் மாணவருடன் அவரின் பள்ளி நண்பர்கள் சிலரும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்பின் அந்த மாணவி அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்க கூச்சலிட்டிருக்கிறார். மாணவி சத்தம் எழுப்பினால் மாட்டி கொள்வோமா என்ற அச்சத்தில் மாணவர்கள், அவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதன்பின் அருகில் இருந்த சிலர் மாணவியின் நிலையை பார்த்து பதறி, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கழுத்தறுக்கப்பட்ட மாணவிக்கு தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் உடனடியாக அந்த மாணவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில், கழுத்தறுக்கப்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை. அப்படி பரவுவதாக வெளியாகும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவரிடம் நடத்திய விசாரணையில், காயமடைந்த மாணவி தன்னை பற்றி பள்ளியில் தவறான கருத்துகளை பரப்பியதால் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications