அறுவெறுப்பு! இன்று பிரியங்கா.. நாளை நம் வீட்டு பெண்கள்.. முளையிலேயே கிள்ளி எறிவோம்.. ஜோதிமணி ட்வீட்!
கரூர்: பாஜகவின் ஆபாச - வெறுப்பு அரசியல், தமிழ் சமூகத்திற்கே மிகப்பெரிய அவமானம். பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்பதாலேயே அண்ணன், தங்கையை அறுவெறுக்கத்தக்க வகையில் பதிவிட்ட பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ், எக்ஸ் சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து இழிவான வகையில் விமர்சனம் செய்து பதிவிட்டார். இதுகுறித்து, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்த நிலையில் இன்று காலை பிரவீன் ராஜை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெர்வித்துள்ளனர். தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வ குமார் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் அன்பு தம்பி பிரவீன் ராஜ் அவர்களை இன்று அதிகாலை 2 மணி அளவில் நாமக்கல் ராசிபுரத்தில் அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதற்கான காரணம் காவல்துறையின் முழு கவனமும் சமூக வலைதளத்தில் மட்டுமே இருப்பதுதான். சமூகத்திற்கு எதிரான கடும்குற்றங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை நிம்மதியாக உறங்க வைத்துவிட்டு சமூக வலைதளங்களில் திமுகவிற்கு எதிராக கருத்து சொல்லும் பாஜக இளைஞரணி நிர்வாகியை அதிகாலை கைது செய்திருக்கிறது கையாலாகத காவல்துறை. இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் வர இருக்கும் நிலையில் இதுபோன்ற அரசியல் கைது திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது.
2024 தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதிசெய்யப்படுகிறது. இதுபோன்ற அடக்குமுறைகளால் எந்தவொரு பாஜக தொண்டனையும் முடக்க முடியாது. கரூர் மக்களுக்கு இதுவரை உருப்படியாக எதுவும் செய்யாத கரூர் எம்.பி ஜோதிமணி, காங்கிரஸை விமர்சனம் செய்த ஒரே காரணத்திற்காக கரூர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து பிரவீன் ராஜை கைது செய்ய வைத்திருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கொடுத்த புகாரில் , ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி அவர்களின் வீடியோவை எடிட் செய்து ஆபாசமாக வெளியிட்டு,அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஐ டி விங் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். . அரசியல் ரீதியாக ,கொள்கை ரீதியாக ஒருவரை…
— Jothimani (@jothims) October 1, 2023
பிரவீன் ராஜ் கைது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, "கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கொடுத்த புகாரில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அவர்களின் வீடியோவை எடிட் செய்து ஆபாசமாக வெளியிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஐ டி விங் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக ஒருவரை விமர்சிக்கலாம். ஆனால் ஒரு அண்ணன், தங்கையை அரசியலில் ஈடுபடுகிறார்கள், பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்பதாலேயே அறுவெறுக்கத்தக்க வகையில் பதிவிடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாஜகவின் ஆபாச - வெறுப்பு அரசியல், தமிழ் சமூகத்திற்கே மிகப்பெரிய அவமானம். இன்று பிரியங்கா காந்தி.. நாளை நமது வீட்டுப் பெண்கள். இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை ஆபாசமாக, அறுவெறுக்கத்தக்க வகையில் விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இனிமேலாவது பாஜகவினர் இதுபோன்ற ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க அரசியலை கைவிட்டு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications