தமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி
கரூர்: தமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாகவும் எப்போது தேர்தல் வரும் என அவர்கள் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கரூர் ஜோதிமணி
தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி.கனிமொழிக்கு நிகழ்ந்த மொழி ரீதியிலான அவமரியாதை சாதாரணமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே தமிழகத்தில் இப்படிப்பட்ட நிலை என்றால் படிப்பறிவில்லாத சாமானியர்களின் நிலையை பற்றி சொல்லவே தேவையில்லை என கவலைத் தெரிவித்தார்.

இந்திக்காரர்கள்
தமிழை ஒழிக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதாக சாடிய ஜோதிமணி எம்.பி., அந்த திட்டம் இங்கு எடுபடாது எனக் கூறியுள்ளார். ரயில்வேயில் கேட் கீப்பர் தொடங்கி உயர் பதவிகள் வரை இந்திக்காரர்கள் தான் பணியமர்த்தப்படுவதாக கூறிய அவர், ரயில் நிலையங்களில் ஒரு டிக்கெட் வாங்குவதற்கு கூட இந்திக்காரர்களிடம் தமிழர்கள் போராட வேண்டியுள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் தாமரை
மேலும், தமிழகத்தை பொறுத்தவரை தாமரை மலரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இங்கு ஒரு போதும் தாமரை மலராது எனவும் அடித்துக் கூறியுள்ளார். விமான நிலையங்கள் மட்டுமல்லாமல் வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவது தமிழர்களின் குறிப்பாக தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் செயல் என ஜோதிமணி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதச்சார்பற்ற தேர்தல்
வரும் சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கான களம் என்றும் மக்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக மீதும், பாஜக மீதும் மக்களுக்கு அளவற்ற கோபம் உள்ளதாகவும் இதனால் அந்தக் கட்சிகள் தோற்கடிக்கப்படுவது உறுதி என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications