கரூர் துயரம்: கூடுதலாக போலீஸ் போட்டிருந்தோம்.. விஜய் சொன்ன டைமுக்கு வந்தாரா? டிஜிபி கேள்வி
கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். ஆண்கள் 12, பெண்கள் 16, ஆண் குழந்தைகள் 5, பெண் குழந்தைகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் முதலில் அனுமதி கேட்டது லைட்டவுஸ் ரவுண்டான மற்றும் உழவர் சந்தை பகுதியில்தான். அது இதைவிட நெரிசலான பகுதி.

இந்த கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக சொன்னார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தோம்.
ஆனால் மதியம் 3 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜய், இரவு 7.50 மணிக்குதான் வந்தார். ஆனால் அக்கட்சி தலைமையின் டிவிட்டர் பக்கத்தில் விஜய், காலை 11 மணிக்கு வருவார்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் 11 மணிக்கே குவிய தொடங்கினர். ஆனால் விஜய் 7.50 மணிக்குதான் வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. முடிவில் காரணம் தெரிய வரும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications