கரூர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது.. தனிப்படை போலீசார் அதிரடி.. தீவிர விசாரணை
கரூர்: கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட ஐந்து பேர் போலீசார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தான் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். காலையில் வருவதாக அறிவித்த விஜய் இரவு 7 மணி அளவில் தான் வந்தார். இதனால் ஏராளமான பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இதனால் நேரம் செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

அப்போது ஏற்பட்ட கடுமையான இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல் முருகன் உள்பட பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதாவது பிஎன்எஸ் பிரிவு 109 இன் படி கொலைக்குச் சமமில்லாத குற்றவியல் மரணம் விளைவித்தல், பிரிவு 110ன் கீழ் குற்றவியல் மரணம் விளைவிக்க முயற்சித்தல்,பிரிவு 125ன் படி, மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல், பிரிவு 223 ன்படி அரசு அதிகாரியால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை போன்ற பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்திருந்தார்கள்.
இந்த வழக்கில் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவரை தேடிவந்த தனிப்படை போலீசார் கரூரில் வைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் மற்றவர்களையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கை பொறுத்தவரை எப்ஐஆர்-ல் தவெக தலைவர் விஜய்யின் பெயர் நேரடியாக குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை. அதேநேரம் தவெக கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் மீது மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. தவெக சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications