2 முறை கேட்டும் சீமான் தரவில்லை! ஏன் என்று தெரியவில்லை! கலாய்த்த அமைச்சர் செந்தில்பாலாஜி!
கரூர்: மின் தடை குறித்து புகார் அளித்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இரண்டு முறை மின் இணைப்பு எண்ணை தாம் கேட்டும் அவர் கொடுக்கவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சீமான் தனது வீட்டு மின் இணைப்பு எண்ணை தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
நேற்றும் இன்றும் கரூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் உற்பத்தி விவரங்கள் பற்றி செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார். அதன்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி 6 நாட்களுக்கு மேல் கையிருப்பில் உள்ளதாகவும் தமிழகத்தில் நிலக்கரி பற்றாகுறை குறைந்துள்ளதாகவும் கூறினார்.

உபரி மின்சாரம்
மேலும், இன்னும் 2 நாட்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்படும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மின் விநியோகத்தை பொறுத்தவரை தடையின்றி வழங்கப்பட்டு
வருவதாகவும் தெரிவித்தார். தற்போது மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் கொடுக்கப்படும் அளவுக்கு தமிழகம் இருந்து வருவதாக நல்ல தகவலையும் வெளியிட்டார்.

சீமான் புகார்
மின் வாரியம் தொடர்பான புகார்களை பெறுவதற்காக அமைக்கப்பட்ட மின்னகம் அலுவலகத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து 8 லட்சம் புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் 99 % புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சீமான் மின் தடை குறித்து டிவிட்டரில் அளித்திருந்த புகார் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த அவர், சீமானிடம் இரண்டு முறை அவர் வீட்டு மின் இணைப்பு எண்ணை தாம் கேட்டும் கொடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

அதிகாரியிடம் பேசி
சீமான் தனது வீட்டு மின் இணைப்பு எண்ணை தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக கலாய்க்கும் பாணியில் பேசினார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனிடையே சீமான் புகாருக்கு டிவிட்டரில் பதில் அளித்த போதும் கடற்கரை சொகுசு பங்களா என அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications