கமல்ஹாசன் கூட்டத்தில் கல் மற்றும் முட்டை வீச்சு... சூலூர் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
Recommended Video
வேலாயுதம்பாளையம்: அரவக்குறிச்சி தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரக் கூட்டத்தில் கல் மற்றும் முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், வேலாயுதம்பாளையம் பகுதியில் அரவக்குறிச்சி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முடித்துவிட்டு செல்லும் போது முட்டை மற்றும் கல்வீசப்பட்டது.

கல் மற்றும் முட்டை வீச்சு
அப்போது, கல்வீசிய நபரை மநீம தொண்டர்கள் அடித்து உதைத்தனர். இதனால், கூட்டத்தில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தளவாபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல் மற்றும் முட்டை வீசிய நபர்களை போலீசார் தப்பிக்கவிட்டதாக சினேகன் குற்றம்சாட்டினார்.

எஸ்.பி. பேச்சுவார்த்தை
மேலும், கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் எஸ்.பி.விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினார். கமல்ஹாசன் பிரச்சார மேடையை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

காலணி வீச்சு
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் பேசியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையல், திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று காலணி வீசப்பட்டது. இன்று அரவக்குறிச்சி தொகுதியில் கல் மற்றும் முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனுமதி மறுப்பு
முன்னதாக, கமல்ஹாசன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலாயுதம்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். தொடர் பிரச்சனைகளால், நாளை சூலூர் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications