விஜய் கிட்டயும் சில கேள்விகள் கேளுங்க.. கரூரில் காட்டமாக சொன்ன உதயநிதி ஸ்டாலின்
கரூர்: "மரத்தில் ஏற வேண்டாம், மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பல கோரிக்கைகள் வைக்கிறோம். இதற்கு மேல் கட்டுப்படுத்துவது குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர், இரண்டாம் கட்ட தலைவர்களுடைய பொறுப்பு" என கரூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,
தவெக தலைவர் விஜய் நேற்று கரூரில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 39 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவரின் நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் துயரச் சம்பவம்
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கூட்ட நெரிசலில் பலர் பலியானதாக தகவல் கிடைத்ததும், விரைவாக கரூர் புறப்பட்டுச் சென்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை பெறுபவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சைகளை வழங்க அறிவுறுத்தினார்.
இதற்கிடையே துபாய் சென்றிருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பயணத்தை ரத்து விட்டு சென்னை திரும்பினார். இன்று காலை கரூர் வந்து சேர்ந்ததும் நேராக மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூரில் நேற்று மாலை நடந்தது மிக மிக துயரமான சம்பவம். இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கவே கூடாது. அரசு சார்பில் முழு பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் இப்படி ஒரு கோர விபத்து நிகழ்ந்து 39 பேர் பலியாகியுள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட ஆட்சியர்கள், அருகிலுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களை உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவழைத்துள்ளார்.
என்னென்ன மருத்துவ உதவிகள் தேவையோ, அவை அனைத்தையும் செய்ய சொன்னார். கரூர் சம்பவம் தொடர்பாக என்னை போனில் அழைத்து மிகவும் வருத்தத்துடன் முதலமைச்சர் பேசினார். அதன்பிறகு அவரே நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கரூர் வந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அரசு துணை நிற்கும்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நாம் அத்தனை பேரும் ஆதரவாக இருக்க வேண்டும். ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்லைச் சேர்ந்த தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்களிடமும் தனித்தனியாக கேட்டு தெரிந்து கொண்டுள்ளேன். அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கரூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்கள் மீட்பு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். இதுபோன்ற விபத்துகள் இனிமேலும் நடக்கக் கூடாது. எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட்டம் நடத்தியுள்ளார். எவ்வளவு கூட்டம் வரும் என அனுமதி கேட்கப்பட்டது, எவ்வளவு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது, கூட்டங்கள் எவ்வளவு தாமதமாக நடந்தது என டிஜிபி தெளிவாக விளக்கி உள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விஜய்யிடம் கேள்வி கேளுங்கள்
மக்களை சந்திப்பது அரசியல் இயக்கத்தினரின் உரிமை, அதனை தடுக்க முடியாது. மரத்தில் ஏற வேண்டாம், மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பல கோரிக்கைகள் வைக்கிறோம். இதற்குமேல் கட்டுப்படுத்துவது குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர், இரண்டாம் கட்ட தலைவர்களுடைய பொறுப்பு. கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது த.வெ.க.வினரின் கடமை. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும். இதுபோன்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இதுபோல இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம். யாரையும் நான் குறை சொல்லவில்லை. விஜய் வாரா வாரம் வருகிறார். உங்களை எல்லாம் பார்க்கிறார். தயவுசெய்து அவரிடமும் சில கேள்விகளை கேளுங்கள்." எனத் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications