பாஜக இப்படி பேசுவது தவறு.. கூட்டணி தர்மத்துக்காக பொறுத்து போறோம்.. மீண்டும் கோபமான கேபி முனுசாமி!
பாஜகவின் குற்றசாட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பதில் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி : திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் வளர்ச்சியடைந்து உள்ளன. தமிழ்நாட்டுக்கு இணையாக வேறு எந்த மாநிலமும் இல்லை என்று பாஜக குற்றசாட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, கூட்டணிக் கட்சியான பாஜக மீது விமர்சனங்களை வைத்து வந்தார். ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட அதிமுக - பாஜக கூட்டணி மோதல் விவகாரத்தில் சாஃப்ட்டாக பேசினார்.
இந்நிலையில், தற்போது பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீண்டியுள்ளார் கே.பி.முனுசாமி.

கேபி முனுசாமி
பாஜக உடனான கூட்டணியை விரும்பாத வகையில் பேசி வந்தார் கே.பி.முனுசாமி இந்நிலையில், சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் அதிமுகவுக்கு தாவியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்ததால், பதிலுக்கு அதிமுக நிர்வாகிகள் பாஜகவினரை விமர்சித்தனர். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம் என்றார்.

கூட்டணி தர்மம்
இந்நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அதிமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எம்எல்ஏ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்தியில் பாஜகவோடு கூட்டணி தர்மம் என்ற வகையில், அவர்களை நாங்கள் விமர்சிக்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து, இணக்கமாக ஒரே குறிக்கோளோடு இந்தியாவை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் வழியில், பிரதமராக மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பாஜக குற்றம்சாட்டுவது தவறு
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என விரும்புவது தவறு இல்லை. ஆனால், திராவிடக் கட்சிகள் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை என குற்றம்சாட்டுவது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, உள்ளிட்ட துறைகளில் சிறந்த மாநில விருதுகளை பெற்றது தமிழ்நாடு. இந்திய நாட்டில் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டிற்கு இணையாக வேறு எந்த மாநிலமும் இல்லை." எனத் தெரிவித்தார்.

காழ்ப்புணர்ச்சி
மேலும் பேசிய அவர், "சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது திமுக அரசின் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது. இதேபோல் முதல்வர் சுற்றுப்பயணத்தின்போது யாரேனும் விமர்சனம் செய்தால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை முதல்வரின் பாதுகாவலர் மீது வழக்குப்பதிவு செய்வார்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications