குடும்பத்தையே காவு வாங்கி இதய நோய்.. குழந்தை பலி, கணவன் மனைவி அடுத்தடுத்து விபரீத முடிவு
கிருஷ்ணகிரி : இதய நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய 3 மாத குழந்தை பலியான வேதனையில் பெண் என்ஜினீயர் உயிரை மாய்த்துக் கொண்டார். அந்த சோகத்தில் காதல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டுப்பட்டியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜலபதி. இவருக்கு வயது 30. இவர் லாரி ஓட்டுநராக கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சாம் ராபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா (25) என்பருடன் லாரி டிரைவர் ஜலபதிக்குகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.
என்ஜினீயரிங் படித்திருந்த அபிசால்மியா, லாரி டிரைவர் ஜலபதியுடன் ஒரு கட்டத்தில் நன்றாக பழக தொடங்கினார். இருவருக்கும் இடையே இருந்த நட்பு சில நாட்களில் காதலாக மாறியது. காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஆனால் லாரி டிரைவர் ஜலபதியைத்தான் திருமணம் செய்வேன் எனறு தனது காதலில் தீவிரமாக இருந்த அபிசால்மியா கடந்த 2021-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து லாரி டிரைவர் ஜலபதி மற்றும் அபிசால்மியா ஜோடி, காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கோரினர். இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழுமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜலபதி அபிசால்மியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர்களுக்கு அப்போது பெரும் அதிர்ச்சியான விஷயத்தை டாக்டர்கள் கூறினார்கள்.
குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பதாக கூறினார்கள். இதையடுத்து அவர்கள் குழந்தைக்கு பல்வேறு மருத்துவனையில் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இதய நோய் குறைபாட்டால் குழந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துபோனது.
தனது குழந்தை இறந்ததால் வேதனை அடைந்த அபிசால்மியா யாரிடமும் பேசாமல் வேதனையில் இருந்த நிலயில், தொடர் மன அழுத்தத்தில் கடந்த 6-ந்தேதி இரவு தனது கணவரின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், குழந்தை இறந்த துக்கம் ஒருபுறம், மறுபுறம் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தற்கொலை என வேதனையில் இருந்த ஜலபதியும் விபரீத முடிவெடுத்தார். புதன்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த ஜலபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதயநோயால் மகள் இறந்து போனதால், கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications