கிருஷ்ணகிரி வாரிசு சான்றிதழ்.. விழித்த வருவாய் ஆய்வாளர்.. தமிழக அரசு அலுவலகங்களில் ஆடிப்போன மக்கள்
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. சாதாரண சான்றிதழ்கள், வழக்கு தொடர்பான அறிக்கைகள், அலுவலக பணிகள் போன்றவற்றுக்கே லஞ்சம் கேட்கப்படும் நிலை தொடர்கிறது. இதோ நேற்றைய தினம் நடந்த சம்பவங்களை பாருங்கள்..!!
செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை பகுதிகளில் நடந்த மூன்று சம்பவங்கள் நேற்றைய தினம் ஒரே நாளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

லஞ்ச ஒழிப்பு குழு
செங்கல்பட்டு அருகே பரனூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.. இங்கு சில அதிகாரிகள், புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, டிஎஸ்பி சரவணன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு குழு, அந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியது. நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை, மாலை 6 மணி வரை நடந்தது. சோதனையில் கணக்கில் வராத 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அரசு அலுவலகங்கள்
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவம், பொதுமக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், திருமணத்தின் போது கொடுத்த வரதட்சணையை மீட்டுத் தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கிற்கான அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்ப சமூக நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய பெண் அலுவலர், 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மறுத்த அந்த பெண், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். திட்டமிட்ட நடவடிக்கையின் மூலம், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே அந்த அலுவலர் லஞ்சம் வாங்கும்போது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.
வாரிசு சான்றிதழ்
இதற்கிடையே, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், லஞ்ச வழக்கில் கடும் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது..
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதாவது சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர், 2014-ம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது பணியில் இருந்த வருவாய் ஆய்வாளர் ஹரிஹரன், சான்றிதழ் வழங்க முதலில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார்.. பிறகு அந்த தொகையை ரூ.25 ஆயிரமாக குறைத்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணவேணி, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நடந்த நடவடிக்கையில், ஹரிஹரன் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். பிறகு அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளன என கூறி, ஹரிஹரனுக்கு மொத்தமாக 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
மேற்கண்ட இந்த 3 லஞ்ச சம்பவங்களும், சாதாரண மக்கள் அரசு அலுவலகங்களில் எவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது என்பதைதான் நமக்கு காட்டுகிறது. ஆனாலும், லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் உள்ளன...!!!












Click it and Unblock the Notifications