தலை, முகத்தை பாலிதீன் கவரால் சுற்றி.. சினிமா பாணியில் ஒரே வீட்டில் 4 பேர் தற்கொலை.. ஓசூரில் ஷாக்
கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே கடன் பிரச்சனை காரணமாக கடிதம் எழுதி வைத்து படுக்கையறையிலேயே 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மத்திகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சொர்ணபூமி லே அவுட் பகுதியில் வசித்து ஆன்லைன் வர்த்தகம் மேற்கொண்டு வந்தவர் மோகன்(45). கிருஷ்ணகிரி அடுத்த ஆலங்காயம் இவரது சொந்த ஊர் என்றாலும் ஓசூர் பகுதியிலேயே தங்கி தொழில் மேற்கொண்டு வந்துள்ளார்.

தொழில் போட்டி
தொழில் போட்டி காரணமாக மோகன் வங்கிகளில் மற்றும் பிற இடங்களில் கடன் பெற்று தொழிலை நடத்தி வந்துள்ளார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக வருமானம் கிடைக்கவில்லை. தொடர்ந்து கடன் அதிகரித்தது. கடன் சுமை வருமானமின்மை காரணமாக வாழ்க்கை நடத்துவதே இயலாத காரியமாக இருந்தது, இதனால் மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்தார்.

4 பேர் தற்கொலை
இதன்படி மோகனின் தாயார் வசந்தா(61) வீட்டின் கீழ் தளத்தில் உள்ள படுக்கறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
வீட்டின் மேல்தளத்தில் உள்ள படுக்கையறையில் மோகனின் மனைவி ரம்யா(36) மற்றும் அவரது 10 வயது மகள் அன்மயி ஆகிய இருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

டிஎஸ்பி வருகை
மோகன் படுக்கையறையின் தரையில் தலை,முகம் முழுவதும் பாலிதீன் கவரால் சுற்றப்பட்டு பிணமாக கிடந்தார். கடன் பிரச்சினையால் குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசூர் டிஎஸ்பி முரளி தலைமையிலான மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை
நால்வர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக்கொள்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பமே தற்கொலை செய்துக்கொண்டிருப்பதாக போலீசார் விசாரணைக்கு பின்னர் தெரிவித்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications