நான் தான் கரியப்பா.. என்னை தெரியலையாப்பா.. திமுக எம்.எல்.ஏ.வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பள்ளி தோழன்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷுக்கு அவரது பள்ளிக்கால நண்பன் ஒருவர் இன்ப அதிர்ச்சிக் கொடுத்த நிகழ்வு நடந்துள்ளது.
நான் தான் கரியப்பா.. என்னை தெரியலையாப்பா.. எனக் கூறி எம்.எல்.ஏ. பிரகாஷை எல்லோர் முன்னிலையிலும் திக்குமுக்காட வைத்திருக்கிறார் அந்த நண்பர்.
உலகின் உன்னதமான உறவுகளில் ஒன்றாக கருதப்படும் நட்பை கொண்டாடாத மனிதர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.
நாட்டிலேயே பாஜகவை வலிமையாக எதிர்ப்பதில் டாப் முதல்வர் ஸ்டாலின்! தமிழக காங்கிரஸ் புகழாரம்!
ஒசூர் தொகுதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தளி பிரகாஷ். இதற்கு முன் தளி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்ததால் தளி பிரகாஷ் என கட்சியினரால் அழைக்கப்படுகிறார். திமுகவில் மாவட்டச் செயலாளராக இருக்கும் இவரைக் காண நூற்றுக்கணக்கில் கட்சியினர் அவரது வீட்டுக்கு வந்து செல்வார்கள். அதேபோல் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்டச் செயலாளர் என இரண்டு பதவிகளில் இருப்பதால் கட்சியினர் ஒரு மரியாதை காரணமாக சற்று தள்ளி நின்று பேசுவார்கள்.
ஆரம்பப் பள்ளி
அப்படித்தான் கடந்த வாரமும் கட்சியினரோடு பேசிவிட்டு கார் ஏறச் சென்ற திமுக எம்.எல்.ஏ. பிரகாஷிடம், நான் தான் கரியப்பா.. என்னை தெரியலையாப்பா.. எனக் கூறிக் கொண்டே ஒருவர் வந்து நின்றிருக்கிறார். இதைப்பார்த்த திமுகவினருக்கு பெரும் ஷாக். யாருப்பா நீ என அவரை அவர்கள் வினவுவதற்குள், பெலகொண்டபள்ளி கிராமத்தில் ஒன்றாக 5-ஆம் வகுப்பு வரை படித்ததை கூறி பிரகாஷ் எம்.எல்.ஏ.வுக்கு நினைவூட்டியிருக்கிறார் கரியப்பா.
நலம் விசாரிப்பு
இதையடுத்து வந்திருப்பது தனது தொடக்கப்பள்ளிக் கால நண்பன் கரியப்பா என்பதை அறிந்துகொண்ட பிரகாஷ் எம்.எல்.ஏ., உரிமையுடன் அவரது தோளில் கைபோட்டு நலம் விசாரித்தார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த கட்சிக்காரர்களும், மனு கொடுக்க வந்த பொதுமக்களும் யாருடா இது எம்.எல்.ஏ.விடம் இந்தளவு உரிமை எடுத்துக் கொள்கிறாரே என சற்று குழம்பிப் போனார்கள். ரஜினிகாந்த் நடித்த குசேலன் பட காட்சியை போல் இருந்தது அந்த நிகழ்வு.
நட்புக்கு முன்னால்
பணம், பதவி, பவுசு, மரியாதை எல்லாம் நட்புக்கு முன்னால் பூஜ்யம் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த நிகழ்வு அமைந்திருந்தது. இந்தக் காலத்தில் வி.ஐ.பி.க்களிடம் எதேச்சையாக ஒரு முறை அறிமுகமாகும் பலரும் அவரை எனக்குத் தெரியும், இவரை எனக்குத் தெரியும் நான் வேலையை முடித்துக் கொடுக்கிறேன் என உதார் விட்டுத் திரியும் நிலையில் கரியப்பாவை போன்ற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.