10 சவரன் தங்கச் சங்கிலியை பரிசாக கொடுத்த மேயர்! கழற்றியெறிந்து கடுகடுத்த அமைச்சர் காந்தி!
கிருஷ்ணகிரி: அமைச்சர் ராணிப்பேட்டை காந்திக்கு ஒசூர் மேயர் சத்யா 10 சவரன் தங்கச் சங்கிலியை பரிசாக அணிவித்த நிலையில், இதை யார் கேட்டது உங்களிடம் என்ற ரியாக்சனை காட்டிவிட்டு உடனடியாக கழுத்திலிருந்து தங்கச்சங்கிலியை கழற்றி அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறார்.
தனக்கு மேயர் பதவி வழங்கியதற்கு நன்றிக்கடனாக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான காந்திக்கு, சத்யா இந்த மரியாதையை செய்திருக்கிறார்.
இதனிடையே தன்னை குஷிப்படுத்துவது முக்கியமல்ல என்றும் கட்சிக்காக உழைக்கும் ஏழை எளிய நிர்வாகிகளுக்கு தான் நீங்கள் இது போல் உதவ வேண்டும் எனவும் ஒசூர் மேயர் சத்யாவுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார் அமைச்சர் காந்தி.
மத்திய அரசிடம் இருந்து கல்வியை மீட்கப் போகிறது திமுக அரசு? ஹைகோர்ட்டில் களமிறங்கிய கபில் சிபல்!
ஒசூர் மாநகராட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு டைடன் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒசூர் மேயர் சத்யா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். மேலும், தனது கையாலயே நிர்வாகிகளை மேடைக்கு அழைத்து கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்.
10 சவரன் தங்கச்சங்கிலி
இதனிடைய் 10 சவரன் தங்கச்சங்கிலியை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் கழுத்தில் பரிசாக அணிவித்த ஒசூர் மேயர் சத்யா, பாதாம் மற்றும் முந்திரிகளால் உருவாக்கப்பட்ட மாலையையும் அணிவித்தார். இதனை துளியும் ரசிக்காத அமைச்சர் காந்தி, அடுத்த நொடியே தனடு கழுத்தில் அணிவிக்கப்பட்ட 10 சவரன் தங்கச் சங்கிலியை கழற்றிக் கொடுத்துவிட்டார். புகைப்படம் எடுப்பதற்கு கூட அவர் நேர அவகாசம் தரவில்லை. இதிலிருந்தே அவர் இது போன்ற செயல்களை விரும்பவில்லை என்பதை மேடையில் இருப்பவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.
அமைச்சர் அறிவுரை
ஒசூர் சத்யாவின் அன்பையும், ஆர்வத்தையும் புரிந்துக் கொண்ட அமைச்சர் காந்தி, நிகழ்ச்சி முடிந்து புறப்படும் போது தனக்கு வசதி வாய்ப்புகள் உள்ள போது தனக்கு எதற்கு இப்படி ஒரு செயின் கொடுக்க வேண்டும் என்றும் கட்சிக்காக உழைக்கும் ஏழை எளிய நிர்வாகிகளுக்கு உதவுங்கள் எனவும் ஒசூர் மேயர் சத்யாவுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். இதனிடையே கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ.வுக்கும் ஒசூர் சத்யா 10 சவரனின் தங்கச் சங்கிலி அணிவித்தார்.
கடும் போட்டி
ஒசூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின் போது கடும் போட்டி நிலவிய நிலையில் சத்யாவை அந்தப் பதவிக்கு பரிந்துரைத்து வெற்றிபெற வைத்தவர் அமைச்சர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.