ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் பிரசாதத்தில் பாம்பு குட்டி எப்படி? ஆக்ஷன் எடுத்த அதிகாரி விசாரணை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் பிரசாத டப்பாவில் கிடந்த பாம்பு குட்டியால் பெண் பக்தர் ஆடிப்போனார். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மலைக்கோவில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் இருக்கிறது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த கோவில் வளாகத்தில் உள்ள பிரசாத கடையை திருச்சியை சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பெங்களூரு பொம்மசந்திரா பகுதியை சேர்ந்த மதனிகா என்ற பக்தர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் பிரசாதம் வாங்கினார். அதனை திறந்து பார்த்த மதனிகா ஆடிப்போனார். காரணம் அதில் பாம்பு குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடந்தது.
இதுபற்றி கடையை ஏலம் எடுத்த நபரிடம் மதனிகா கேட்ட போது அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.. பின்னர் நடந்தவை குறித்து மதனிகா கோவில் செயல் அலுவலரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் செயல் அலுவலர் சாமித்துரை உடனடியாக அந்த கடை மீது நடவடிக்கை எடுத்தார். இதன்படி, பிரசாத கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்ததுடன், கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.
மேலும் பிரசாத டப்பாவில் பாம்பு குட்டி எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக செயல் அலுவலர் சாமித்துரை விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் சந்திரசூடேஸ்வரர் கோவில் வளாகத்தில் மட்டும் அல்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications