கிருஷ்ணகிரி கல்யாண மண்டபத்தில் ரூ.16 லட்சம் தங்க நகைகள்.. காதலனுக்காக களவாணியான கல்லூரி மாணவி
கிருஷ்ணகிரி: பொதுவாக திருமண வீடுகளில் தங்க நகைகளை அதிக அளவில் அணிந்து வருகிறார்கள். சிலர் தங்க நகைகளை கொண்டு பாதுகாப்பாக வைத்திருந்து காலையில் விஷேசம் நடக்கும் போது நகைகளை அணிவார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ள ஒரப்பத்தில் அண்மையில் திருமணம் ஒன்று நடைபெற்றது. அங்கு 21 சவரன் தங்க நகைகள் திருடுபோனது. அதனை காதலனுக்காக கல்லூரி மாணவி திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடந்தையாக இருந்த 3 பேர் கைதாகி உள்ளனர்.
எந்த திருமண விழாவிற்கு சென்றாலும் தங்க நகைகளை அதிகம் பேர் அணிந்திருப்பதை காண முடியும். தங்க நகைகள் அதிகம் அணிந்திருப்போரை குறிவைத்து சில திருடர்கள் திருடுவதும் நடக்கிறது. மண்டபத்திற்கு செல்லும் சிலர் தங்க நகைகளை பெட்டியில் வைப்பார்கள்.. சிலர் பையில் பாதுகாப்பாக வைத்திருந்து, காலையில் எழுந்து அணிவார்கள். அப்படி செய்த பெண் நகைகளை பறிகொடுத்தார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கிருஷ்ணகிரி திருமணம்
சேலம் சுந்தர்லாட்ஜ் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுகேல். இவருக்கும், கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த சுமையா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கடந்த ஜூன் 16ம் தேதி அன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ள ஒரப்பத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
21 சவரன் தங்க நகைகள்
இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருமண வீட்டார் அனைவரும் கடந்த ஜூன் 15-ந் தேதி அன்று இரவே மண்டபத்திற்கு வந்து அங்குள்ள அறைகளில் தங்கியிருந்தனர். அப்போது சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 27 வயதாகும் கதிஜா என்பவரும் அவர்களுடன் தங்கினார். பின்னர் காலை கதிஜா எழுந்து பார்த்த போது தனது பையில் இருந்த 21 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.
செல்போன் சிக்னல்
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கதிஜா கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் இளவரசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அங்குள்ள செல்போன் டவர் மூலம் யாருக்கெல்லாம் போன் சென்றது என விசாரணை நடத்தப்பட்டது. அதில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்னேரி வயக்காடு பகுதியை சேர்ந்த கிஷோர் (19) என்பவருக்கு திருமண மண்டபத்தில் இருந்து செல்போன் மூலம் அடிக்கடி பேசப்பட்டது தெரிய வந்தது.
ஷீபா திருடினார்
கிஷோரிடம் பேசிய நபர் யார் என்று பார்த்த போது, மண்டபத்தில் கதிஜாவுடன் தங்கி இருந்த சேலம் இந்திரா நகரை சேர்ந்த 19 வயதாகும் ஷீபா என்பது தெரிய வந்தது. சேலத்தில் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வரும் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினா். அதில் அவர் கிஷோரின் காதலி என்பது தெரிய வந்தது. மேலும் கதிஜா தூங்கியதும் அவரது பையில் இருந்து 21 பவுன் நகைகளை ஷீபா திருடியதும், அந்த நகைகளை சேலத்தில் உள்ள தனது காதலனிடம் கொடுக்க போன் செய்ததும் தெரிய வந்தது.
காதலி கொடுத்த நகைகள்
காதலி கொடுத்த திட்டத்தின்படி நகைகளை வாங்குவதற்காக கிஷோர் தனது நண்பரான 20 வயதாகும் ஜோதி என்பவருடன் பைக்கில் சேலத்தில் இருந்து பர்கூருக்கு இரவோடு இரவாக வந்தது தெரியவந்தது. மேலும் ஷீபா தனது காதலனின் வருகைக்காக இரவு விழித்து காத்திருந்து, காதலன் கீழே வந்து போன் செய்ததும், நைசாக திருடிய தங்க நகையை அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
கைதான குடும்பம்
இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவி ஷீபாவையும், நகையை திருடி சென்ற கிஷோரையும் கைது செய்தனர். இந்த நகையை கிஷோரின் தந்தை மகேந்திரன் (48), சக்திவேல் (42) ஆகிய 2 பேரும் சேர்ந்து உருக்கி விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேல், மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான ஜோதியை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications