பள்ளிகள் திறந்து மூன்று நாளாச்சு.. மாணவர்களுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 21, மாணவிகளுக்கு 14, கல்லூரி மாணவர்களுக்கு 6, மாணவிகளுக்கு 6 என மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர வருகிற 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
2025-26-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் இறுதி வாரத்தில் இருந்து அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படும் போது, மாணவர்கள் வசதிக்காக விடுதிகளும் திறக்கப்படும். தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் ஏழை, எளிய மாணவர்கள் தங்கி படிப்பதற்காக விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகள் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் தரமாக இருக்கும். உணவு, தங்கும் இடம் , சீருடைகள் வழங்கப்படும்.

இங்கு மாணவர்கள் தங்கியிருந்தபடி, பள்ளிக்கு சென்று வருவார்கள். அருகில் மேல்நிலைப்பள்ளி இல்லாத ஊர்களை சேர்ந்த மாணவ மாணவிகள், மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவ மாணவியர், சரியான போக்குவரத்து வசதிகள் இல்லா உள்கிராமங்களில் வாழும் மாணவ மாணவிகள் பலருக்கும் அரசின் விடுதிகள் தான் கல்வி கற்க உதவுகிறது. நகர்புறங்களில் உள்ள இந்த விடுதிகளில் தங்கி மாணவர்கள் இன்று படித்து வருகிறார்கள். அப்படி விடுதிகளில் தங்கிபடிக்க விரும்பும் மாணவர்கள் உடனே அருகில் உள்ள விடுதிகளில் சேரலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல மாணவர் மற்றும் மாணவிகளுக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு 21, மாணவிகளுக்கு 14, கல்லூரி மாணவர்களுக்கு 6, மாணவிகளுக்கு 6 என மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தகுதியானவர்கள். அவா்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். மேலும் மாணவ, மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த நீட், ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வுகளுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
இந்த விடுதியில் சேர மாணவ-மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை விடுதி காப்பாளர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளை பொறுத்தவரையில் வருகிற 18-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரையில் ஜூலை 15-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications