விஏஓ டூ தாசில்தார்.. பட்டா திருத்தம்.. கிருஷ்ணகிரி கிராம நிர்வாக அலுவலருக்கு மறக்க முடியாத பாடம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதிரம்பட்டியை சேர்ந்த சசிகலா என்பவர் பெயரில் புதிதாக பெறப்பட்ட பட்டாவில் 3 முறை பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய முயன்ற போது, கிராம நிர்வாக அலுவலர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அவரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படுகிறது என்றால், கையோடு வருவாய் துறை மூலம் பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய முடியும். அதேநேரம் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள், பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள் அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிப்பவர்களிடம் சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. விஏஓ, சர்வேயர், தாசில்தார் என யாராவது ஒருவர் லஞ்சம் கேட்பதாககுற்றச்சாட்டுகள் உள்ளன. அப்படி லஞ்சம் கேட்ட அதிகாரி ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கையும் களவுமாக சிக்கி உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கதிரம்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி சசிகலா பெயரில் புதிதாக பெற்ற பட்டாவில் 3 முறை பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து மனைவி பெயரில் உள்ள பட்டாவை திருத்தம் செய்ய வடிவேல் ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து பட்டாவில் பெயர் திருத்தம் செய்து தர வேண்டி வடிவேல், வீரணகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் அகத்தூயவனை அணுகினார். பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய அவர் ரூ.4 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. முதலில் லஞ்சம் தர ஒப்புக்கொள்வது போல் பேசிவிட்டு வடிவேல் வந்தாராம்.ஆனால் லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத வடிவேல் இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வீரண குப்பம் கிராம நிர்வாக அலுவலர் அகத்தூயவனை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை வடிவேலிடம் வழங்கி, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வடிவேல், நேற்று காலை 11 மணி அளவில் ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஜமாபந்தி பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டிருக்கிறார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் அகத்தூயவன் வெளியே வந்து, வடிவேலிடம் ரூ.4 ஆயிரம் லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டார். அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலர் அகத்தூயவன் வாங்கி எண்ணி பார்த்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அகத்தூயவனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications