கிருஷ்ணகிரியில் இரட்டை ஆணவக் கொலை! ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி! பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மகனையும் அவருக்கு ஆதரவு தெரிவித்த தாயையும் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (50). இவரது மகன் சுபாஷ் (28). இவர் எம்பிஏ முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார்.
இவரது பெற்றோர்களும் அதே பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொல்லாபுரத்தைச் சேர்ந்த 25 வயது அனுசுயாவுக்கும் சுபாஷிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் தண்டபாணிக்கு தெரியவந்தது. அவர் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த பெண் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை திருமணம் செய்து மருமகளாக்கினால், ஊர்க்காரர்களும் சொந்தக்காரர்களும் நம்மை மதிக்க மாட்டார்கள் என்றே இவர் கூறி வந்துள்ளார்.
சுபாஷ் தனது தந்தையிடம் பேசி பார்த்தும் பயனில்லை என்பதால் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சுபாஷ், அனுசுயாவை பதிவு திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில் சுபாஷின் பாட்டியான 65 வயது கண்ணம்மாள், இவர்களது திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனால் சுபாஷையும் அனுசுயாவையும் சொந்த ஊரான அருணபதிக்கு அந்த பாட்டி அழைத்தாராம். இதனால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று சொந்த கிராமத்திற்கு புதுமணத் தம்பதி வந்தனர்.
அன்றைய தினம் இரவு அவர்கள் தங்கிய நிலையில் தண்டபாணியை கண்ணம்மாள் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் தண்டபாணி இந்த திருமணத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு தண்டபாணி, அந்த வீட்டிற்கு சென்றார். அப்போது சுபாஷ் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை வெட்ட முயன்ற போது கண்ணம்மாள் தடுத்தார். இதனால் அவரையும் வெட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்த மகனையும் தண்டபாணி வெட்டி கொலை செய்தார்.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து தப்பியோட முயன்ற மருமகள் அனுசுயாவையும் தண்டபாணி வெட்டினார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீஸார் பாட்டி, பேரனின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அது போல் அனுசுயாவுக்கு உயிர் இருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா, குற்றம்சாட்டப்பட்ட தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும் 8 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
ஆணவக்கொலைக்கு எதிராக வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை அடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரே பட்டாசு வெடித்து தீர்ப்பை கொண்டாடினர். அண்மைக்காலமாக ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications