உரிமைத் தொகை கேட்ட ஓசூர் நபருக்கு ஷாக்.. வருவாய்க்கு ரூ.1500 கோடி ஜிஎஸ்டி கட்டுங்க! ஐடி நோட்டீஸ்
கிருஷ்ணகிரி: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த நபரின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதுடன், அவர் ஆண்டுக்கு ரூ.7000 கோடி வருமான ஈட்டுவதாக கூறி வணிக வரித்துறையிடம் இருந்து வந்த நோட்டீசால் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்து தேர்ப்பேட்டையை சேர்ந்த ராஜா நடராஜன். இவர் அங்குள்ள உழவர் சந்தையில் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தில் போதிய வருவாய் இல்லாததால் அப்செட்டாகி இருந்த நடராஜனுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்து உள்ளது ஐடி அனுப்பிய நோட்டீஸ். ஆம், சென்னை எழும்பூரில் நடராஜனுக்கு சொந்தமாக தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இயங்கி வருவதாகவும், அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6,902 கோடி வருவாய் ஈட்டி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வருவாய்க்கான ஜிஎஸ்டி வரியாக நடராஜன் ரூ.1500 கோடிக்கு மேல் கட்ட வேண்டும் என்ற நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அதை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த வேலைகளில் இருந்தார் நடராஜன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு தனது மனைவியின் பெயரில் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பிக்க சென்று இருக்கிறார். ஆனால், அப்போதும் அந்த வருமான வரித்துறை நோட்டீசை காட்டி நடராஜனின் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து இருக்கிறார்கள்.
ரூ.6000 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டி வரும் உங்களுக்கு எதற்கு ரூ.1000 உரிமைத் தொகை என அதிகாரிகள் எழுப்பிய கேள்வியால் ஆடிப்போய் உள்ளார் நடராஜன். இதுகுறித்து அவர் பேட்டியளித்து இருப்பதாவது, எனக்கு சம்பந்தமே இல்லாத கடிதத்தை அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார்கள். ரூ.7000 கோடி வருமானத்தை காட்டி ரூ.1932 கோடி வரி கட்ட வேண்டும் என பொய்யான தகவல் வந்து உள்ளது. அது வந்த 2 - 3 மாதம் ஆகிறது. இவ்வளவு பெரிய தொகைக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று இருந்தேன்.
அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்க சென்றபோது வருடா வருடம் இவ்வளவு வரி செலுத்தும் உங்களுக்கு எப்படி அரசின் ரூ.1000 கிடைக்கும்? கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள். 7 ரூபாய்க்கு வழியில்லாதவர்கள் ரூ.7000 கோடிக்கு நான் எங்கே செல்வது. இது தொடர்பாக நான் மான நஷ்ட வழக்கு தொடுக்க உள்ளேன்." என்றார்.
ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பெற தகுதியான பெண்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு, அதை விண்ணப்பிப்பதற்காக 3 கட்டங்களாக முகாம்களை நடத்தியது. அதன் மூலமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்தன. உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டு திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசாணையில் உள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், தகுதியில்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்ப முடிவு குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications