மதத்தின் பெயரால் துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக ஓட்டு போட்டேன்.. ஓபிஎஸ் டீம் புகழேந்தி பரபர
கிருஷ்ணகிரி: மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். அங்கு ஓபிஎஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 பேரும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டனர். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தீவிரமாகப் பணியாற்றினர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவின் செய்தி தொடர்பாளர் பெங்களூர் வா. புகழேந்தி வாக்களித்தார். தனது வாக்கை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் புகழேந்தி.
அப்போது அவர் பேசுகையில், "இந்தியா என்கின்ற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இந்த நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற திராவிட இயக்கத் தலைவர்களின் வழியில் மதச் சார்பற்ற ஜனநாயகத்தை எப்போதும் போல தழைக்கச் செய்ய இன்று வாக்களித்துள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், பாஜக கூட்டணி ஆதரவுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாகப் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த புகழேந்தி, "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவார்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications