வீட்டை விட்டு ஓடிப்போய் மகன் காதல் திருமணம்.. பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை.. கிருஷ்ணகிரியில்
கிருஷ்ணகிரி: மகன் தங்கள் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு ஓடிப்போய் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேதனை அடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
காதல் இளைஞர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், அவர்களது காதல் திருமணம் சில பெற்றோர்களுக்கு தீராத வலியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. காதல் திருமணம் குறித்த புரிதல் இன்னமும் பல கிராமங்களுக்கு போய் சேரவில்லை. காதல் திருமணம் செய்பவர்களை அழிக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்களே தங்களை அழித்துக் கொள்கிறார்கள்.

வேறு சமூகம்: வேறுசாதி ஆண் அல்லது பெண்ணை காதல் திருமணம் செய்வதை கிராமப்புறங்களில் மோசமான விஷயமாக இன்றும் பார்க்கிறார்கள். அந்த திருமணத்தை பலர் வெறுக்கவும் செய்கிறார்கள். இது ஒரு புறம் எனில் மகன் அல்லது மகள் காதலித்து திருமணம் செய்வதை தாங்கி கொள்ள முடியாமல் பெற்றோர் வேதனையில் விபரீத முடிவும் எடுக்கிறார்கள். அந்த சம்பவம் புதிதாக வாழ்க்கையை ஆரம்பிக்க ஆசைப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வலியை தரும் நிகழ்வாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெருகோனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு 50 வயது ஆகிறது. இவருடைய மனைவி கீதா இவருக்கு 45 வயது ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
காதல் மலர்ந்தது: இந்நிலையில் சரவணன் கீதா தம்பதியின் மூத்த மகன் ரஞ்சித்குமார் (27) அதே ஊரைச் சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரியான தீபிகா (23) என்பவரை காதலித்து வந்துள்ளார். தீபிகா ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். ரஞ்சித்குமார் மற்றும் தீபிகா ஆகியோர் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் ஆவார்.
வீட்டை விட்டு ஓட்டம்: இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், இருவரும் காதலை கைவிடவில்லை. இருவருமே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதன்படியே காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
விபரீத முடிவு: மகனை காணாது தேடி வந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் சரவணன், கீதா ஆகியோர், திருமணம் செய்து கொண்ட தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்களுடைய பேச்சை கேட்காமல் இப்படி திருமணம் செய்து கொண்டானே மகன் என்று வேதனை அடைந்த அவர்கள் திடீரென விபரீத முடிவை எடுத்தனர். அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் வீட்டில் சரவணன், கீதா தம்பதி அருந்தக்கூடாத விஷ மருந்தை அருந்தி மயங்கி விழுந்தார்கள்.
தம்பதி உயிரிழப்பு: இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சரவணன், கீதா தம்பதியை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே 2 பேரும் இறந்து விட்டதாக கூறினார்கள்.
மகன் காதல் திருமணம் செய்து கொண்டதை ஏற்று கொள்ள முடியாமல் கணவன்-மனைவி இருவரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த தம்பதிக்கு இந்த சம்பவம் அழியாத கறையாகவும், வலியாகவும் அமைந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தற்கொலை தடுப்பு: தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications