60 ஆண்டுகளாக தண்ணீர் வசதி, கழிப்பறை இல்லை.. கொரோனா வந்தால் சாக வேண்டியதுதான்.. மக்கள் கண்ணீர்
கிருஷ்ணகிரி: 60 ஆண்டுகளாக தண்ணீர் வசதி இல்லை, சாலை வசதிகள் இல்லை. எங்கள் கிராமத்திற்கு கொரோனா வந்தால் சாக வேண்டிய நிலையில் இருக்கிறோம் என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமரன் வட்டம் கிராமத்தினர் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பகுதியைச் சேர்ந்த நாகஜோனஹள்ளி பேரூராட்சிக்குள்பட்ட சென்றாம்பட்டி கிராமத்தை உள்ளடங்கிய குமரன் வட்டம். இப் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
"இந்தக் கிராமத்துக்கு 60 ஆண்டு காலமாக தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்யவில்லை. இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வந்தது இல்லை. தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை" என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறினர்.
கொரோனாவை கட்டுப்படுத்த மதுரையில் தீவிரம்- நடமாடும் முகாம்கள்... வீட்டுக்கு வீடு பரிசோதனை
தண்ணீர் பிரச்சினை
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில் தங்கள் பகுதியின் வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பு, ஆடு கோழி, மாடு மற்றும் விவசாயத்தை சார்ந்து தங்கள் வாழ்வாதாரம் இருப்பதாகவும் தண்ணீர் பிரச்சினை வந்தவுடன் தங்களின் கால்நடைகள் முதற்கொண்டு விவசாயம் செய்த பயிர்கள் வரை மறைந்து விடுகிறது. விவசாயம் செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு பாதிப்புக்குள்ளாகிறோம் என்கிறார்கள்.
பெரியவர்கள்
30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பது கிணறு ஒன்று தான். இந்த கிராமத்தில் இருக்கும் ஒரே கிணறு அவற்றில் அவரவர் குடும்ப பங்கிற்கு 20 ஆயில் மோட்டார் வைத்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கிணறு வற்றி விட்டதால் குடிநீருக்கும் கால்நடைகளுக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தண்ணீர்
தங்கள் பகுதிக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வரவும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை கொண்டுவரவும், விவசாய இடு பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ வாகன வசதி செய்து சென்றுவர முடியாத அவலநிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப தனியார் பள்ளி வாகனங்களும் கிராமத்திற்கு வந்து செல்ல, கர்ப்பிணிகளுக்கு நோய்வாய்ப்பட்டால் ஆம்புலன்ஸ் வருவதற்கு வசதி இன்றி தவித்து வருகின்றனர்.
தடுப்பது
இவர்கள் பயன்படுத்தும் ஒற்றை வழி பாதை தற்காலிக பாதை அவ்வப்போது பட்டாக்காரர்கள் வழிவிடாமல் தடுப்பதாகவும் மிகவும் மன வேதனை அடைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். சடலங்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லவும் வழியில்லாத அவலநிலை இருப்பதாகவும், அப்பகுதி மக்கள்
வாழ்வதற்கு சாலை வசதி இல்லை இறந்தபின் அடக்கம் செய்வதற்கும் சாலை வசதி இல்லை, குடிநீருக்காக அரசு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை வழங்க முடியாமல் இருப்பதாகவும் உடனடியாக தங்கள் பகுதிக்கு குடிநீர் மற்றும் சாலை வசதியை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
பெண்கள்
கிராமத்தில் வசித்து வரும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் என இதுவரை கழிவறைகள் கூட இல்லாத அவலம் நிலவுகிறது.
பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பது தவிர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை கழிவறைகள் கூட இல்லாத கிராமம். தங்கள் கிராமத்திற்கு கொரானா பரவ செய்தால் நாங்கள் செத்து மடிய வேண்டியதுதான் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.