இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா.. ஜூலையை காட்டிலும் தீவிரமாகும் 3ஆவது அலை!
லண்டன்: இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் உச்சத்திலிருந்த 3-ஆவது அலையைவிட தற்போதைய கொரோனா கேஸ்கள் அதிகமாகவே இருக்கிறது. இதனால் தற்போது மீண்டும் 3ஆவது அலை தீவிரமடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் தற்போது 3ஆவது அலை தீவிரமாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருந்த நிலையில் கடந்த 7 தினங்களாக கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.
இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்து நாளும் நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் கொரோனாவால் 52,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இதுவரை 86 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
Job Alert:எழுத்துத்தேர்வு இல்லை.. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள வேலைகள்.. மிஸ் பண்ணாதீங்க
முதல் தவணை தடுப்பூசி
இங்கிலாந்தில் முதல் தவணை தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் போட்டுக் கொண்டதாகவும் இரு தவணைகளையும் 79 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கடந்த 7 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு சராசரியாக 46 ஆயிரமாக உள்ளது.
ஜூலை மாதம்
கடந்த 21 ஆம் தேதி ஜூலை மாதம் கொரோனா 3ஆவது அலை உச்சத்தில் இருந்த போது ஒரு நாளைக்கு 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது. இங்கிலாந்தில் தற்போது குளிர்காலம் தொடங்கிவிட்டது.
கொரோனா அதிகரிக்க வாய்ப்பு
இதனாலும் கொரோனா அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது இடங்களில் மக்கள் குவிய வேண்டாம் என அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும் மக்கள் இத்தனை நாள் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்த நிலையில் தற்போது வெளியே வரத் தொடங்கிவிட்டனர்.
5 லட்சம் பேர்
இதனால் கடந்த இரு தினங்களில் மட்டும் 5 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்துள்ளார்கள். 6 மாதத்திற்கு முன்னால் 2ஆவது தவணை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் கொரோனாவின் தீவிர பிடியிலிருந்து ஓரளவு தப்பலாம் என சொல்லப்படுகிறது.
கொரோனா 2ஆவது அலை
நேற்றைய தினம் 49,298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாசிட்டிவான 28 நாட்களில் 180 பேர் பலியானது தெரியவருகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளன. இங்கிலாந்தில் கொரோனா பரவலால் இதுவரை 1.21 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். தடுப்பூசி போடாதவர்களே இந்த 3ஆவது அலையில் சிக்கி தவிக்கிறார்கள் என தெரியவருகிறது.
இங்கிலாந்தில் இரண்டாவது அலை தீவிரமானப் பின்னர் இந்தியாவில் மிகத்தீவிரமாக இரண்டாவது அலை பரவியது. தற்போதுள்ள தளர்வுகளில் அலட்சியம் காட்டாதீர்கள் மூன்றாவது அலை வராது என்று சொல்ல முடியாது, நாம் கவனமாக இருக்கவேண்டும் என்று சுகாதாரத்துறைச் செயலர் கூறியதையும் அலட்சியப்படுத்த முடியாது. ஆகவே மூன்றாவது அலை வருவதை தவிர்ப்போம், வரும் முன் காப்போம். இங்கிலாந்து நமக்கு தரும் பாடத்தை வைத்து கவனமாக இருப்போம்.