பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று.. புதிய வகை கொரோனாவா?
லண்டன்: லண்டனில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளில் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்கள் 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இங்கிலாந்தில் புதிய வகை உருமாற்றம் செய்யப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் 70 சதவீதம் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அது போல் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான சேவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அது போல் பிரிட்டனில் இருந்து இன்று இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து நேற்று இரவு 266 பேர் டெல்லி வந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இவர்களிடம் எடுக்கப்பட்ட சளி மாதிரிகள் தேசிய நோய் தடுப்பு மையத்திற்கு ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் அது புது வகை வைரஸா என்பது தெரியவரும். 5 பேரும் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவில் யாருக்கும் புதிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை. பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா, பாகிஸ்தான், போலாந்து, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், ரஷ்யா, ஜோர்டான், பிரான்ஸ், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் துண்டித்தன.












Click it and Unblock the Notifications