லண்டனில் பெங்களூர் குழு நடத்திய அரசியலமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.. விசிட் அடித்த ஸ்டாலின்!
பெங்களூர்: 'After the Assembly: Constituting India' என்ற தலைப்பில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அரசியல் அமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் பெங்களூரை சேர்ந்த Reclaim Constitution என்ற அமைப்பும் பங்கேற்று அரங்குகளை அமைத்து இருந்தது. இந்த கண்காட்சி அரங்கை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எஸ்.ஓ.ஏ.எஸ் கேலரியில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 'ரீக்ளெயம் கான்ஸ்டிடியூஷன்' (Reclaim Constitution) என்ற அமைப்பு கண்காட்சி அரங்குகளை அமைத்துள்ளது.

அரசியலமைப்புச் சபையின் விவாதங்கள் பற்றிய ஆவணங்கள் மற்றும் பிற காப்பகப் பொருட்களைக் காட்சிப்படுத்தி அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட ஆரம்ப நாட்கள் குறித்த ஏராளமான தகவல்களை நினைவுகூரும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற்றது. அரசியலமைப்பு தொடர்பான கலைப்படைப்புகள் உள்ளிட்டவையும் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
இந்த கண்காட்சி அரங்கை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் சென்று பார்வையிட்டார். முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஜெர்மனி மற்றும் லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில்தான், இந்த கண்காட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
சாதாரண குடிமக்களும் கடிதம் அனுப்பினர்
இது தொடர்பாக 'ரீக்ளெயம் கான்ஸ்டிடியூஷன்' அமைப்பைச் சேர்ந்த வினய் குமார் கூறியதாவது:- "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் அரசியல் நிர்ணய சபையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டதாக ஒரு எண்ணம் நிலவுகிறது. ஆனால், சாதாரண மக்களும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பங்காற்றியுள்ளனர்.
அரசியல் நிர்ணய சபைக்கு சாதாரண குடிமக்கள் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அனுப்பினர். அவை இங்கே உள்ளன" என்றார். முதல்வர் ஸ்டாலின் வருகை குறித்து அவர் கூறும் போது, "தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை இங்கு வருகை தந்தார். அவரிடம் நாங்கள் செய்து வரும் பணிகள் குறித்து தெரிவித்தோம்" என்றார்.












Click it and Unblock the Notifications