தோல்தான் கருப்பு.. ஆனா மனசு.. காயமடைந்த அமெரிக்கரை தோளில் தூக்கி உதவிய "வெள்ளைமனசுக்காரர்"- வைரல்
லண்டன்: கருப்பினத்தவர்களுக்கு எதிராக தொடரும் வன்முறையை கண்டித்து லண்டனில் நடந்த போராட்டத்தின் போது அவர்களை ஒடுக்க வந்து காயமடைந்த வெள்ளை இனத்தை சேர்ந்த நபரை மனிதாபிமானம் கொண்ட கருப்பின இளைஞர் தூக்கிச் சென்று உதவி செய்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு, புரூக்ஸ் ஆகிய இருவர் போலீஸ் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இனவாதம், அடக்குமுறையால் இந்த கொலை நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டும் மக்கள் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
லண்டனில் கடந்த 13-ஆம் தேதி வாட்டர்லூ ஸ்டேஷன் அருகே போராட்டம் நடந்தது. அப்போது அந்த போராட்டத்தில் முதல் முறையாக பேட்ரிக் ஹட்ஸின்சன் என்பவர் கலந்து கொண்டார்.

ரத்தம்
100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் அதற்கு எதிரானவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தை எதிர்க்கும் நபரை போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கினர். ரத்தம் சொட்ட சொட்ட விழுந்து கிடந்த அவரை கருப்பினத்தை சேர்ந்த பேட்ரிக் உள்ளிட்ட சிலர் தோளில் சுமந்து சென்று காப்பாற்றினர்.

பேட்ரிக் நண்பர்கள்
இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நம்மை ஒடுக்க வந்தவர் என்ற வெறுப்பு இல்லாமல் வெள்ளை இனத்தவரை கருப்பினத்தவர்கள் காப்பாற்றியது அவர்களின் மனிதநேயத்தை காட்டுகிறது. அப்போதும் விடாமல் தாக்குவதற்காக போராட்டக்காரர்கள் துரத்தினர். எனினும் அவரை பேட்ரிக்கின் நண்பர்கள் யாரும் தாக்காதவாறு தற்காத்தனர்.

போராட்டக்காரர்கள்
இதுகுறித்து பேட்ரிக் கூறுகையில் அந்த நபர் அடிப்பட்டு கிடந்த போது அவர் போராட்டத்திற்கு எதிரானவர் என்ற பாரபட்சத்தை காட்ட வேண்டும் என நான் நினைக்கவில்லை. நான் அவரை மீட்டு தூக்கிக் கொண்டு சென்ற போதும் அவரை போராட்டக்காரர்கள் தாக்க முயன்றனர். என் நண்பர்கள் அவர்கள் தாக்காதவாறு அரண் போல் காத்தனர். பின்னர் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தோம்.

நல்ல காரியம்
அவர்களில் ஒருவர் எங்களுக்கு நன்றி என கூறினார். இன்னொரு நீங்கள் நல்ல காரியத்தை செய்துள்ளீர்கள் என்றார். மக்களிடையே உள்ள இனபாகுபாடுகளை உடைத்தெறிய வேண்டும் என விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒருவரே என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அனைவருக்கும் சமஉரிமை வேண்டும்.

மனிதாபிமானம்
எனது குழந்தைகள், எனது பேரக் குழந்தைகள் உள்ளிட்ட இந்த உலகில் நான் வாழ்ந்ததை காட்டிலும் சிறப்பாக வாழ வேண்டும். நான் வாழும் வாழ்க்கை எனது தந்தை, தாத்தா ஆகியோரை காட்டிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவான சமஉரிமை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என்றார். அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீது தொடர்ந்து வன்முறை, அடக்குமுறை நடைபெற்று வரும் போதிலும் அது போன்ற பாகுபாடு இல்லாமல் ஒரு உயிர் என்ற மனிதாபிமான அடிப்படையில் பேட்ரிக் அனைவர் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.












Click it and Unblock the Notifications