அதென்ன ஸ்பேஸ் ஷிப்பா? வானில் தோன்றிய ஒளி.. அலறிய இங்கிலாந்து மக்கள்.. யுஎப்ஓவிற்கு இடையில் இதுவேறயா?
ஒவ்வொரு ஆண்டும் பூமியில் சுமார் 40 ஆயிரம் விண்கற்கள் மோதுகின்றன என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
லண்டன்: இங்கிலாந்தில் நள்ளிரவு 3 மணியளவில் வானில் திடீரென மிக பிரகாசமான வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. இது காரில் பயணித்தவர்கள் தொடங்கி மொட்டை மாடியில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் வரை அனைவரிடையேயும் மிகுந்த ஆச்சரியத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த சில நாட்களாக வான் வெளியில் சில மர்ம பொருட்கள் பறந்து பீதியை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் சீனாவின் ஆய்வு பலூன் ஒன்று அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்தது. இது முழுக்க முழுக்க வானிலையை ஆய்வு செய்ய பயன்படுத்தியதாக சீனா விளக்கம் கொடுத்தாலும், அதனை அமெரிக்கா ஏற்கவில்லை. எனவே போர் விமானங்களை கொண்டு இதனை சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனையடுத்து, நேற்று கனடா வான் பரப்பில் அடையாளம் தெரியா பொருள் ஒன்று சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அந்த பொருள் என்ன என்று சரியாக அடையாளம் காண முடியவில்லை என்றும், அது 8 கால்கள் கொண்ட ஆக்டோபஸ் போன்ற அமைப்பில் இருப்பது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனையடுத்து கனடா ராணுவமும், அமெரிக்க ராணுவமும் இப்பொருளை சுட்டு வீழ்த்தியுள்ளது. தற்போது இந்த பொருளை இரு நாட்டு அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

விடியற்காலை 3 மணிக்கு
இதே போன்ற பொருள் ஒன்று அமெரிக்க வான் எல்லையிலும் பறந்து நேற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த பொருளும் போர் விமானத்தின் உதவியுடன் சுட்டு வீழ்த்தப்பட்டது. மர்ம பொருள் குறித்து பரவலான பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் வான்வெளியை கவனமாக கண்காணிக்க தொடங்கியுள்ளன. அப்படி இருக்கையில், இங்கிலாந்தில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வானில் பிரகாசமான ஒளி தெரிந்துள்ளது. இந்த ஒளி சந்திரனின் வெளிச்சத்தைவிட பிரகாசமாக இருந்துள்ளது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த காவல்துறையினரின் காரில் இருந்த டேஷ் போர்டு கேமிராவில் இது தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன.

அச்சுறுத்தல்
ஏற்கெனவே மர்ம பொருள் குறித்த பீதி ஓயாத நிலையில், தற்போது இந்த வெளிச்சம் புதிய அச்சுறுத்தலை அந்நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. பலரும் ஏலியன்கள்தான் நமது பூமியின் மீது படையெடுத்து வருகிறது என்றும், நம்மை அவர்கள் ஆக்கிரமித்துவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்திருந்தனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்களும் வேகமாக பரவியது. இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு அறிவியல் ஆய்வாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதில் இது ஒரு விண்கல் என்றும் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்ததால் பூமியின் மீது மோதும்போது அதிக ஒளியை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

1 மீட்டர்
வழக்கமாக ஒவ்வொரு நாளும் பூமியை 10 முதல் 50 விண்கற்கள் தாக்கும். இது அனைத்தும் மிகச் சிறியதாக இருக்கும். பூமியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் இருப்பதால் இந்த கற்கள் வரும் வேகத்தில் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிடும். அல்லது மணல் துகள்களை போல சிறியதாக எங்கேனும் விழுந்து கிடக்கும். நம் வீட்டு மொட்டை மாடியில் விழுந்திருந்தாலும் இதனை கண்டுபிடிப்பதும் கடினம். அந்த வகையில் தற்போது விழுந்துள்ள இந்த கல் Sar2667 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது சுமார் 1 மீட்டர் அளவில் இருந்திருக்கிறது. எனவேதான் வளிமண்டலத்தில் உரசி பெரிய அளவில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணிப்பு
சொல்லப்போனால் இந்த கல்லின் வருகையை விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து ஐரோப்பாவின் விண்வெளி ஏஜென்சி (ESA) கூறுகையில், "நாங்கள் இதுபோன்று விண்கல்/சிறுகோள்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த வகையில் இதனை முன்னரே அறிந்திருந்தோம். எதிர்பார்த்தபடி இந்த விண்கல் சரியான திசையில் விழுந்திருக்கிறது. எனவே விண்கற்களை முன்கூட்டியே அறிதலின் நம்முடைய திறனை இது வெளிக்காட்டியுள்ளது" என்று கூறியிருக்கிறது. தற்போது இந்த விண்கல் பிரான்ஸின் ரூவன் நகரத்திற்கு அருகே விழும் என்று ESA கணித்திருந்தது. அதேபோலதான் இக்கல்லும் விழுந்திருக்கிறது. இதனைய யூடியூபர்கள் சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர். இக்கல் வளிமண்டலத்தில் உரசியதில் மொத்தமாக எரிந்துவிட்டதாகவும் ESA கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications