அமெரிக்காவை எகிறி அடிக்க கிடைத்த வாய்ப்பு.. சொதப்புகிறாரா ஜெய்சங்கர்? இப்படி ஆயிடுச்சே!
லண்டன்: இந்தியா மீது வரி விதிப்போம் என்று வாய் பேசி வரும் அமெரிக்காவை, எகிறி அடிக்க கிடைத்த வாய்ப்பு 'பிரிக்ஸ் கரன்சி' தான். ஆனால், இந்தியாவுக்கு இதில் விருப்பம் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். இப்படி சொன்னதன் மூலம் இந்தியா மிகப்பெரிய வாய்ப்பை இழந்திருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் பேசியதாவது,
"பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கவோ, அதை டாலருக்கு மாற்றாகவோ பயன்படுத்தும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை. டாலரை தவிர வேறு எந்த கரன்சியையும் ஆதரிக்க மாட்டோம்" என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். இவரது பேச்சு இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கின்றன. சில பொருளாதார நிபுணர்கள் இவரது பேச்சுக்கு ஆதரவளித்துள்ளனர். பலர் இதனை எதிர்த்துள்ளனர். சரி ஏன் இவரது பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி பார்ப்போம்.

டாலர் ஏன் இவ்வளவு பலமானதாக இருக்கிறது?:
அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால்தான் டாலரின் ஆதிக்கமும் பலமானதாக இருக்கிறது. உதாரணத்திற்கு வர்த்தகத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வர்த்தகம் மிக முக்கியம். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து பல பொருட்கள் தேவைப்படலாம். இந்தியாவுக்கு பெட்ரோல், தங்கம், கணிமங்கள் தேவை. இதெல்லாம் எங்கிருந்து கிடைக்கும்? பெட்ரோல் அரபு நாடுகளிலிருந்தும், தங்கம் லண்டனிலிருந்தும், கணிமங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்தும் கிடைக்கும்.
இறக்குமதியும் டாலரும்:
சரி இதனை எப்படி வாங்குவது? இதற்காகத்தான் டாலர் பயன்படுகிறது. அரபு நாடுகளுக்கு என தனி கரன்சி இருக்கிறது. லண்டனுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கூட தனி நாணயம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் அந்த நாடுகள் டாலரில் பொருட்களை விற்கின்றன? காரணம் அமெரிக்காவின் ஆதிக்கம்தான். ராணுவ ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இன்னும் பல விஷயங்களில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்துதான் பயணிக்கின்றன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா தேவை. எனவே, அமெரிக்க டாலர்களில் பொருட்களை விற்கின்றன.
இந்தியாவும் டாலரும்:
டாலரில் வர்த்தகம் இவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கு சிக்கலான ஒன்று. பெட்ரோலை வாங்க நமக்கு டாலர் வேண்டும். இன்றைய தேதியில் டாலரின் மதிப்பு ரூ.87.23 ஆகும். அப்படியெனில் நாம் முதலில் டாலரை வாங்கி பின்னர் அதை கொடுத்து பெட்ரோலை வாங்க வேண்டும். இது நமக்கு இரண்டு வேலை.
நமக்கு மட்டும் கிடையாது, நம்மை போன்ற வளரும் நாடுகள் எல்லாவற்றிற்கும் சிக்கல்தான். எனவே இதற்கான மாற்று யோசனையை பல நாடுகள் முன்வைத்தன. இப்படி வந்ததுதான் பிரிக்ஸ் கரன்சி என்கிற யோசனை.
பிரிக்ஸ் கரன்சி:
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் சேர்ந்ததுதான் பிரிக்ஸ் அமைப்பு. இந்த நாடுகள் தங்களுக்கு இடையே சொந்த கரன்சியில் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றன. அதாவது இந்தியாவுக்கு பெட்ரோலை ரஷ்யா சப்ளை செய்கிறது. ரஷ்யாவுக்கு நாம் ரூபாயைதான் கொடுக்கிறோம். டாலரை கிடையாது. இதனால் நமக்கு நிறைய லாபம் இருக்கிறது.
இந்த வர்த்தகத்தை ஒருபடி மேலே உயர்த்த பிரிக்ஸ் நாடுகளுக்கு என ஒரு பொதுவான கரன்சியை உருவாக்க சீனாவும், ரஷ்யாவும் முயன்று வருகின்றன. இதனை வைத்து சீனாவிடமிருந்து தொழில்நுட்ப பொருட்களையும், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்காவிடமிருந்து கனிம வளங்களையும் நம்மால் வாங்க முடியும். அப்படி மட்டும் நடந்தால் டாலரின் மதிப்பு சரிய தொடங்கும். முற்றிலுமாக சரியாது. ஆசியாவில் மட்டும் கணிசமான அளவுக்கு டாலர் ஆதிக்கம் குறையும்.
இந்தியாவுக்கு கிடைத்த சான்ஸ்:
இது டிரம்ப்புக்கு நாம் கொடுக்கும் பதிலடி. இந்தியா மீது அதிக வரியை விதிக்கப்போகிறேன் என்று அவர் பேசி வருகிறார். ஏற்கெனவே கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு வரி போட்டிருக்கிறார். இந்த வரி எனும் அம்பு நம் பக்கம் திரும்பாமல் இருக்க, பிரிகஸ் கரன்சியை நோக்கி நாம் நகர்வது அவசியம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரிக்ஸ் கரன்சி பக்கம் போனால்.. அந்த நாடுகளுடன் நாங்க அண்ணம் தண்ணி பழக மாட்டோம் என டிரம்ப் வார்னிங் கொடுத்திருக்கிறார். அதனால் இந்தியாவுக்கு இதனால் பெரிய சிக்கல் ஒன்றும் வந்துவிட போவதில்லை. இப்படியான வாய்ப்பை பயன்படுத்த வேண்டிய சூழலில்தான், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "எங்களுக்கும் பிரிக்ஸ் கரன்சிக்கும் சம்பந்தமில்லை" என சொதப்பியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?












Click it and Unblock the Notifications