“சோனிக் பூம்”.. ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் முன் நகரமே அதிரும்படி கேட்ட சத்தம்! என்ன நடந்தது?
லண்டன்: மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இருந்து எமர்ஜென்சி குறியீடு அனுப்பப்பட்டதால், உடனடியாக, ஹீத்ரூவில் இருந்து டைஃபூன் போர் விமானம் கிளம்பியது. இதன் காரணமாக நார்ஃபோக் பகுதியில் இன்று மிகப்பெரிய அளவில் குண்டு வெடித்தது போல சத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பையில் இருந்து ஏஐசி 129 என்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த விமானி, அந்த விமானம் லண்டன் ஹீத்ரோவை நெருங்கும் போது எமர்ஜென்சிக்கான ஸ்குவாக் குறியீட்டை அனுப்பினார். ஏர் இந்தியா விமானம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து நார்ஃபோக் பிராட்ஸுக்கு மேலே சுற்றிக் கொண்டிருந்தது.

இதையடுத்து, லண்டன் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்குவதற்கு முன், அந்த விமானத்தை ஆய்வு செய்ய லிங்கன்ஷையரில் இருந்து RAF யூரோஃபைட்டர் டைஃபூன் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது ஜெட் விமானம் சூப்பர் சோனிக் வேகத்தை எட்டியபோது மிகப்பெரிய சத்தம் ஏற்பட்டது.
ஏர் இந்தியா விமானம் ஜெட் விமானத்தால் இடைமறிக்கப்பட்டதால், அந்த விமானம் தரையிறங்கவில்லை. இதையடுத்து, சில நிமிடங்களில் டைபூன் ஜெட் விமானங்கள் தரையிறங்கின. சிவிலியன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் வழிகாட்டுதலின் கீழ் ஏர் இந்தியா விமானம் திட்டமிட்டபடி தரை இறங்கலாம் என தகவல் கொடுத்ததாக ராயல் விமானப்படை உறுதிப்படுத்தியது.
இங்கிலாந்தின் ராயல் விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ராவல் கன்னிங்ஸ்பையில் இருந்து RAF டைபூன் போர் விமானம் இன்று மதியம் ஒரு சிவிலியன் விமானத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்டது. பின்னர் சிவிலியன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் கீழ் ஏர் இந்தியா விமானம் அதன் பயணத்தை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டது." எனத் தெரிவித்துள்ளார்.

ஜெட் விமானம் அதிக வேகத்தில் இயங்கியபோது, நார்போக் பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு பெரிய குண்டு வெடிப்பு சத்தம் போல கேட்டுள்ளது. "எங்கள் தலைக்கு மேலே இரண்டு குண்டுகள் வெடித்தது போல சத்தம் கேட்டது" என அங்கு வசிக்கும் நபர் ஒருவர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
"பயங்கர சத்தத்தால் எங்கள் முழு வீடும் அதிர்ந்தது. என்ன சத்தம் என்று பார்க்க, அனைவரும் வெளியே ஓடி வந்தோம்" என ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு பொருள் ஒலியின் வேகத்தை விட வேகமாக காற்றில் பயணிக்கும் போது ஏற்படும் அதிர்வு அலைகள் உருவாகும்போது ஏற்படும் பயங்கர சப்தம் 'சோனிக் பூம்' என அழைக்கப்படுகிறது.
இறுதியில் ஏர் இந்தியா விமானம் ஹீத்ரோ விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதை லண்டன் ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications