'இத்தனை ஆண்டுகளாக நீங்க என்ன செஞ்சீங்கனு தெரியும்-' ஐநா ஊழியர்களை அடித்து உதைத்து தாலிபான்கள் அடாவடி
லண்டன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கனை விட்டு வெளியேற முயன்ற ஐநா ஊழியர் ஒருவரைத் தாலிபான்கள் அடித்து உதைத்து மோசமான தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் இருந்த வரை காத்திருந்த தாலிபான்கள், இப்போது மீண்டும் ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். தவறான நேரத்தில் ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேறியதே இதற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
1996 - 2001 வரையிலான ஆட்சியைப் போல இல்லாமல், இந்த முறைப் பெண்களுக்குக் கூடுதல் உரிமைகள் அளிக்கப்படும், அனைத்து சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

சர்வதேச அமைப்பின் ஊழியர்கள்
அதேபோல இத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றியவர்கள் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தாலிபான்கள் உறுதியளித்தனர். ஆனால், களத்தில் நடப்பது முற்றிலும் வேறாக உள்ளது. ஐநா போன்ற அமைப்புகளில் பணியாற்றிவயர்கள், சர்வதேச ஊடகங்களில் பணியாற்றியவர்கள் ஆகியோருக்கு எதிராகத் தாலிபான்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகளாக யாருக்காக வேலை செய்தார்களோ, அந்த அமெரிக்காவே இவர்களுக்குச் சரியான நேரத்தில் உதவவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஐநா ஊழியர் மீது தாக்குதல்
இந்நிலையில், ஐநா ஊழியர்களைத் தாலிபான்கள் தாக்கியதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐநா ஊழியர் ஒருவர் ஆப்கனை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். விமான நிலையம் அருகே முகாமிட்டுள்ள தாலிபான்கள் அவரது காரை சோதனை செய்துள்ளனர். அதில் அவர் ஐநா ஊழியர் என்பதைக் கண்டறிந்த தாலிபான்கள், அவரை அடித்துத் துன்புறுத்தி அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும்
அதேபோல கடந்த திங்கள்கிழமை ஐநா ஊழியர் ஒருவரது வீட்டிற்குத் தாலிபான்கள் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஐநா ஊழியர் வேலைக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவரது மகன் தான் இருந்துள்ளார். தந்தை வீட்டில் இல்லை என்று கூறிய மகனை மிரட்டிய தாலிபான்கள், "உன் அப்பா எங்க இருக்கிறார், யாருக்கு வேலை செய்கிறார், இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தார் எல்லாம் எங்களுக்குத் தெரியும். அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துக் கொள்கிறோம்" என்று கூறி மிரட்டிச் சென்றுள்ளனர்.

தாலிபான்கள் பதில்
இவை மட்டுமில்லை, ஆப்கன் நாடு முழுவதும் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஐநா ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து தாலிபான்கள் உடனடியாக எந்தவொரு பதிலையும் தரவில்லை. சர்வதேச அமைப்புகளின் ஊழியர்கள் ஆப்கனில் தொடர்ந்து பணியாற்றலாம் என்றும் அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த புகார்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
Recommended Video

ஐநா கூறுவது
இந்த சம்பவங்கள் குறித்து ஐநா செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "காபூலில் இப்போது யார் அதிகாரத்தில் உள்ளார்களோ அவர்கள் தான் ஐநா ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு. இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக உதவியவர்களுக்கு உடனடியாக விசா வழங்கி உதவ வேண்டும் என்று உலக நாடுகளுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார். ஆப்கனில் பணியாற்றி வந்த 300 வெளிநாட்டு ஐநா ஊழியர்கள் கஜகஸ்தான் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் இன்னும் அங்கு சுமார் 3000 ஐநா ஊழியர்கள் உள்ளனர். அவர்களை ஆப்கனில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications