இனி 16 வயதானாலே வாக்களிக்க முடியும்.. பிரிட்டன் அரசு கொண்டு வந்த முக்கியமான சட்டம்! ஏன் முக்கியம்
லண்டன்: பெரும்பாலான நாடுகளில் இப்போது வாக்களிக்கும் வயது 18ஆகவே இருக்கிறது. அதன்படியே பிரிட்டன் நாட்டிலும் கூட வாக்களிக்கும் வயது 18ஆகவே இத்தனை காலம் இருந்து வந்தது. இதற்கிடையே ஜனநாயக அமைப்பில் மிகப் பெரிய மாற்றமாக அங்கு பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் வாக்களிக்கும் வயது 18ஆகவே இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் வாக்களிக்கும் வயது 18ஆகவே இருக்கிறது. அதேநேரம் அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டுமே வாக்களிக்கும் தேதி 16ஆக இருக்கிறது.

வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு
உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே பிரிட்டன் நாட்டில் இப்போது வாக்களிக்கும் வயது 18ஆக இருக்கிறது. இதைத் தான் 16ஆக குறைக்கப் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முன்மொழிவு நாடாளுமன்றத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. 16 மற்றும் 17 வயதான இளைஞர்களுக்கு உரிய நியாயத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தச் சட்ட முன்மொழிவு கொண்டு வரப்பட்டுள்ளது. 16 வயதிலேயே பலர் வேலை செய்கிறார்கள்.. மேலும், ராணுவத்தில் கூட பணியாற்றுகிறார்கள் அப்படியிருக்கும்போது அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளிப்பதே சரியாக இருக்கும் எனப் பிரிட்டன் அரசு கூறுகிறது.
பிரிட்டன் அரசு
பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பிராந்தியங்களில் உள்ளூர் தேர்தல்களில் 16 வயதிலேயே வாக்களிக்க முடியும். இப்போது ஒட்டுமொத்தப் பிரிட்டனுக்கும் அந்த வயது குறைக்கப்படுகிறது. இது குறித்து பிரிட்டன் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரேனர் "நமது ஜனநாயகச் செயல்முறையில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஓட்டுநர் உரிமம் மற்றும் ராணுவ வீரர்களுக்கான அட்டைகள் போன்றவற்றை டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே வாக்களிக்கலாம் என்ற மாற்றத்தையும் கொண்டு வரவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.. மேலும், இங்கிலாந்து வங்கியின் அடையாள அட்டைகளும் வாக்காளர் அடையாளமாக விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவில் மக்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியும்.
கடுமையாக்கப்படும் நடைமுறைகள்
பிரிட்டன் தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் மற்றும் வேட்பாளர்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளைக் கடுமையாக்கலும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, 500 பவுண்டுகளுக்கு அதிகமான நன்கொடைகளின் பின்னணியைச் சோதிக்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும், போலி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் நன்கொடைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரிட்டன் அரசு கூறியிருக்கிறது.
என்ன காரணம்!
பிரிட்டன் நாட்டில் தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு சதவிகிதம் தொடர்ந்து குறைந்தே வருகிறது. குறிப்பாகக் கடந்தாண்டு நடந்த தேர்தலில் 59.7 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு இருந்தது. கடந்த 2001க்கு பிறகு பிரிட்டனில் பதிவான குறைந்தபட்ச வாக்குப்பதிவு சதவீதம் இதுவாகும். வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்கவே பிரிட்டன் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வாக்களிக்கும் வயதை ஏற்கனவே 16 ஆகக் குறைத்த நாடுகளில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாக்களிக்கும் வயது குறைப்பு தேர்தல் முடிவுகளில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்றே கூறப்பட்டுள்ளது. இதை எல்லாம் வைத்தே பிரிட்டன் வாக்களிக்கும் வயதைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications