டிரம்ப் ஸ்டைல் அரசியல்! அமெரிக்காவை போல பிரிட்டனிலும் இந்தியர்கள் குறி! அடுத்தடுத்து கைது- என்னாச்சு
லண்டன்: சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் குடியேறியவர்களைக் குறிவைத்து அமெரிக்கா தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் இப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் அங்குச் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் உட்படப் பல வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராகத் தேர்வான டிரம்ப் தொடக்கம் முதலே பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அவர் பிரச்சாரத்தின் போதே அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றப் போவதாகக் கூறியிருந்தார்.

டிரம்ப்:
சொன்னபடியே டிரம்ப் அதிபரான உடன் அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதன்படி சுமார் 100+ இந்தியர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். கைவிலங்கிட்டு கழிப்பறை கூட பயன்படுத்தச் சிரமப்பட்டு, ராணுவ விமானத்தில் அவர்கள் நாடுகடத்தப்பட்ட விதம் கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. இருப்பினும், நாடு கடத்தும் நடவடிக்கை தொடரும் என்றே டிரம்ப் அறிவித்துள்ளார்.
பிரிட்டன்:
இதற்கிடையே அமெரிக்காவைத் தொடர்ந்து இப்போது பிரிட்டனும் நாடு கடத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சியின் அரசு அங்குச் சட்டவிரோதமாக வேலை செய்பவர்களைக் குறிவைத்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. யுகே வைட் பிளிட்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த சோதனையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் இந்திய உணவகங்கள், பார்கள், கடைகள், கார் வாஷிங் சென்டர் ஆகியவற்றை குறிவைத்து அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
பிரிட்டன் நாட்டின் உள்துறைச் செயலர் யவெட் கூப்பர் தனிப்பட்ட முறையில் இந்த பணிகளைக் கவனித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் மட்டும் சட்ட விரோதமாக நுழைந்தோரில் சுமார் 828 பேரைக் கைது செய்துள்ளதாக யவெட் கூப்பர் அறிவித்துள்ளார். இது முந்தைய ஆண்டு உடன் ஒப்பிடும்போது 50% அதிகம் என்றும் கூறப்படுகிறது.
தீவிர நடவடிக்கை:
தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்து எல்லா துறைகளிலும் சட்ட விரோதமாக வேலை செய்வோரைப் பிடித்து வருவதாக யவெட் கூப்பர் தரப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் உணவகங்கள், கஃபேக்கள், பார்கள் உள்ளிட் சர்வீஸ் இடங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அதிகம் இருப்பதால் அங்குக் குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக யவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூப்பர் மேலும் கூறுகையில், "குடியேற்ற விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். நீண்ட காலமாக, இங்குள்ள ஹோட்டல் ஓனர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை முறைகேடாக பணிக்கு அமர்த்தி, அவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள். இதனால் அவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்தனர்.. அவர்களை அமலாக்கத் துறையும் தடுக்கவில்லை. அவர்கள் ஆபத்தான முறையில் சிறு படகில் பயணித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், சட்டவிரோதமாக அவர்கள் வேலை செய்வது நமது பொருளாதாரத்தையே பாதிக்கும்" என்றார்.
இக்கட்டான சூழல்:
கடந்தாண்டு வரை அங்கு ரிஷி சுனக் அரசு ஆட்சியில் இருந்த நிலையில், அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனம் இருந்தது. இப்போது தொழிலாளர் கட்சி ஆட்சியை அமைத்துள்ள நிலையில், சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
இந்தியர்கள்:
அவர்கள் பல்வேறு நாட்டினரையும் குறிவைத்தே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், இந்தியர்கள் அதிகம் கைதாவதாகக் கூறப்படுகிறது. அப்படி தான் வடக்கு இங்கிலாந்தின் ஹம்பர்சைடில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் நடத்திய ரெய்டில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நான்கு பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications