இந்திய பொருட்களுக்கு வரியை போட்டு தாக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்.. ஜெய்சங்கர் கொடுத்த ரியாக்ஷன்
லண்டன்: ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பேசிய நிலையில், பிரிட்டனில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதுபற்றி கருத்து கூறியுள்ளார். அமெரிக்க நிர்வாகம் இந்தியாவின் நலன்களுடன் ஒத்துப்போகும் பன்முகத்தன்மையை நோக்கி நகர்கிறது எனவும் கூறியிருக்கிறார்.
அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் அப்போது முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் பதிலடியாக வரியை விதித்து வருகிறார்.

இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவில் வரி வசூலிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையின் கீழ் இந்திய பொருட்களுக்கு அதிகளவு வரி விதிக்கப்படும் எனவும் கூறி வந்தார். இதை உறுதி செய்யும் விதமாக நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என்றார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும். அவர்களின் சந்தைகளில் இருந்து விலக்கி வைக்க பணமற்ற கட்டணங்களை செயல்படுத்தினால், நமது சந்தைகளில் இருந்து அவர்களை தள்ளி வைக்க பணமற்ற தடைகளை நாமும் உருவாக்குவோம்" என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பிறகாக பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் இது குறித்து கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:- டிரம்பின் தலைமையின் கீழ் அமெரிக்க நிர்வாகம் இந்தியாவின் நலன்களுடன் ஒத்துப்போகும் பன்முகத்தன்மையை நோக்கி நகர்கிறது. அமெரிக்காவுடனான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்காவில் உள்ளார்.
அவருடன் நான் ஆலோசித்தேன். இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் அவசியம் குறித்தும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டன" என்றார். சீனாவுடனான உறவு குறித்து பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது:- சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தனித்துவமான உறவு உள்ளது. எங்கள் இருநாடுகளின் நலன்களும் மதிக்கப்படும் நிலையான உறவை நாங்கள் விரும்புகிறொம்" என்றார்.
மத்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 4 முதல் 9 நாட்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கோள்ளும் ஜெய்சங்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications