ரிஷி சுனக்கிற்கு காத்திருக்கும் மெகா சவால்! என்ன செய்ய போகிறார்? முதல் சில நாட்கள் ரொம்பவே முக்கியம்
லண்டன்: பிரிட்டன் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு வரும் நாட்களில் முக்கிய சவால்கள் காத்திருக்கிறது.
பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டு உள்ளார். 200 ஆண்டு வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராவது இதுவே முதல்முறையாகும்.
ரிஷி சுனக்கை பிரிட்டன் மன்னர் சார்லஸ் பிரதமராக நியமித்தார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் மிக விரைவில் பதவியேற்றுக் கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன்
உலகின் மிக பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், புதிய பிரதமர் பதவியேற்றால் அடுத்த சில நாட்களுக்குப் பல சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. எப்போதும் டவுனிங் தெருவில் உள்ள 10ஆம் எண் கொண்ட வீடு தான் பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருக்கும். இங்கு தான் ரிஷி சுனக் சற்று நேரத்திற்கு முன் பிரதமராகத் தனது முதல் அதிகாரப்பூர்வ உரையை நிகழ்த்தினார்.

பெரிய சவால்
மிக மோசமான நிலையில் இருக்கும் பிரிட்டன் பொருளாதாரத்தைக் காப்பதே தனது முதல் சவால் என்று அவர் குறிப்பிட்டார். செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது, அங்குள்ள பணியாளர்கள் அணிவகுத்து நின்று தங்கள் புதிய பாஸை வரவேற்பார்கள். இத்துடன் இன்றைய சம்பிரதாய நிகழ்வுகள் முடிந்துவிடும். அடுத்தகட்டமாக ரிஷி சுனக் அமைச்சர்களை நியமனம் செய்வதில் கவனம் செலுத்துவார்.

முக்கியம்
தேர்தலுக்குப் பின் புதிதாகத் தேர்வு செய்யப்படும் பிரதமர்களைப் போல ரிஷி சுனக்கிற்கு பொறுமையாகச் செயல்பட எல்லாம் காலம் இல்லை. ஏற்கனவே இரு பிரதமர்கள் சில மாத இடைவெளியில் பதவி விலகியுள்ளனர். மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் ரிஷி சுனக் இப்போது பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால் மிக விரைவில் பொருளாதாரத்தைச் சீர் செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

அமைச்சர்கள்
முதற்கட்டமாக இதற்காக முக்கிய துறைகளுக்கு அவர் அமைச்சர்களை நியமிப்பார் எனத் தெரிகிறது. பலரும் வியக்கத்தக்க வகையில் சில அமைச்சர்கள் நியமனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியிலும் பல கோஷ்டிகள் உள்ள நிலையில், அனைத்து தரப்பினரையும் சமாதானம் செய்யும் வகையில் இந்த அமைச்சரவை நியமனம் இருக்க வேண்டும். இதனால் அமைச்சரவை தேர்வில் அவர் மிகவும் கவனமாகவே செயல்பட வேண்டும்.

புதிய கொள்கைகள்
அதேபோல ரிஷி சுனக் தனது புதிய கொள்கைகள் எதையும் அறிவிக்கவில்லை. அவர் கடைசியா கடந்த ஜூன் மாதம் தான் அறிவித்து இருந்தார். இருப்பினும், அதன் பின் பிரிட்டன் பொருளாதாரம் பெரியளவு மாறிவிட்டது. எனவே, அவரது முதல் வேலையைப் பொருளாதாரம் எப்படி உள்ளது என்பதை உணர்ந்து அதைச் சரி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல் நாளில் அரசு உயர் அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள்.

அணு ஆயுதங்கள்
வரும் நாட்களில் மற்றொரு முக்கிய நிகழ்வும் நடக்கும். பிரதமர் ரிஷி சுனக் நாட்டின் ட்ரைடென்ட் நீர்மூழ்கிக் கப்பல்களின் நான்கு தளபதிகளுக்குக் கடிதம் எழுதுவார். பிரிட்டன் நாட்டின் மீது யாராவது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருக்கும். இவை அந்த நீர்மூழ்கிக் கப்பலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். பிரிட்டன் உடனான தொடர்பை அந்த கப்பல் இழக்கும்போது, இந்த கடிதத்தை ஓபன் செய்வார்கள். இது அந்நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உலக தலைவர்கள்
அடுத்து வெளிநாட்டுத் தலைவர்கள் உடன் தொலைப்பேசி உரையாடல்கள் இருக்கும். ஏற்கனவே சுனக்குடன் பேச பைடன் ஆர்வமாக உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். எனவே, அடுத்து அவர் பைடன், இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் உடன் பேசுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications