மலாலாவை மணம் முடித்த அசார் மாலிக்.. பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கும் இவருக்கும் இப்படியொரு தொடர்பா?
லண்டன்: பெண் கல்விக்காகப் போராடி நோபல் பரிசையும் பெற்ற மலாலா, அசார் மாலிக் என்பவரை நேற்றைய தினம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அசார் மாலிக் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் மலாலா. அந்நாட்டின் பெண் கல்விக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த வந்த இவர், கடந்த 2012ஆம் ஆண்டு தாலிபான்களால் சுடப்பட்டார்.
2012 அக்டோபர் 9ஆம் தேதி பள்ளி சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, பேருந்திற்குள் அத்துமீறி நுழைந்த தாலிபான் பயங்கரவாதி மலாலாவை தனது துப்பாக்கியால் சுடத் தொடங்கினான்.

மலாலா
இதில் படுகாயம் அடைந்த மலாலாவுக்கு முதலில் இஸ்லாமாபாத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு கோமா நிலையில் இருந்த அவர் பிரிட்டன் நாட்டலுள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுமார் ஒரு வாரக் காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக். 17ஆம் தேதி கோமாவில் கண் விழித்தார். சுமார் 3 மாத சிகிச்சைக்குப் பிறகு 2013 ஜனவரி மாதம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நோபல் பரிசு
அதன் பின்னரும் தாலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து மலாலாவுக்கு பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இருப்பினும், தனது கொள்கையில் இருந்து துளியும் பின்வாங்காத அவர், தொடர்ந்து பெண் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறார். இதற்காகக் கடந்த 2014ஆம் ஆண்டு மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. அவர் தற்போது பிரிட்டன் நாட்டில் வசித்து வருகிறார்.

திருமணம்
இந்நிலையில், 24 வயதான மலாலா நேற்றைய தினம் (நவ. 9) பிரிட்டனின் பிர்மின்காம் நகரில் அசார் மாலிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் அவர்களது குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள மலாலா, தனது திருமணத்தின் படங்களையும் பகிர்ந்திருந்தார்.

யார் இந்த அசார் மாலிக்
மலாலா தான் திருமணம் செய்து கொண்டதாக ட்வீட் செய்ததில் இருந்தே அவரது கணவர் யார் என்பதை அறிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வமானார்கள். இருப்பினும், மலாலா தனது கணவரின் பெயரை தவிர வேறு எதையும் பதிவிடவில்லை. இந்நிலையில் மலாலாவின் கணவர் அசார் மாலிக் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட்
தொழிலதிபரான அசார் மாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளர் உள்ளார். அவர் விளையாட்டுத் துறையில், குறிப்பாக கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். பாகிஸ்தானில் டி20 அணியான முல்தான் சுல்தான் அணிக்கான வீரர்கள் மேம்பாட்டுத் திட்டத்தையும் வடிவமைத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் 2020ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அசார் மாலிக் லாகூரில் உள்ள அட்சின்சன் கல்லூரியிலும் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார்.

ட்வீட்
தனது திருமணம் குறித்து மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று எனது வாழ்வின் முக்கியமான நாள். அசாரும் நானும் திருமணம் செய்து கொண்டோம். பிர்மின்காமில் எங்கள் குடும்பத்தினருடன் திருமணம் எளிய முறையில் நடந்தது. உங்களது ஆசியும் வாழ்த்துகளும் தேவை. வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்கப் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சி" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications