ரூ.66 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா.. வெறும் ரூ.100 ரூபாய் கொடுத்தால் போதுமாம்! என்ன காரணம் தெரியுமா
லண்டன்: 6.6 கோடி ரூபாய் மதிப்புள்ள குடியிருப்பு வெறும் 100 ரூபாய்க்குக் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படியொரு மெகா ஜாக்பாட் சம்பவம் தான் பிரிட்டன் நாட்டில் அரங்கேறி இருக்கிறது.
பிரிட்டன் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இந்த பொருளாதார பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமலேயே லிஸ் டிரஸ் என்பவர் சில வாரங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

அதன் பிறகே அங்கே ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தார். அதன் பிறகு அந்நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்களைச் சரி செய்ய அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
வெறும் ஒரு பவுண்டு: இதற்கிடையே பிரிட்டனில் உள்ள கார்ன்வால் கவுன்சில், 640,000 பவுண்டுகள், அதாவது ரூ.6,6 கோடி மதிப்புள்ள வீட்டை வெறும் 1 பவுண்டுக்கு ( ₹ 103) விற்பனை செய்துள்ளனர். நகரில் குறைந்த விலையில் அனைவருக்கும் வீடுகள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த செப். 13ஆம் தேதி இதற்கான ஒப்புதலை அளித்துள்ளனர். அதன்படி லூய் என்ற பகுதியில் கடலுக்கு அருகே இருக்கும் 11 குடியிருப்புகளை இந்த குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்த குடியிருப்புகளைப் பராமரிக்க ஆகும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. அதிக விலை காரணமாகக் குடியிருப்பை யாரும் வாங்கத் தயாராக இல்லை. பராமரிப்பு தொகையும் அதிகரித்தால் அதுவே கவுன்சிலுக்கு பெரிய சுமையாக மாறியது. இதன் காரணமாகவே குறைந்த விலைக்கு இந்த குடியிருப்புகளை விற்றுள்ளனர். இது த்ரி சீ கம்யூனிட்டி லேண்ட் டிரஸ்ட் என்ற அமைப்பிற்கு ஒரு பவுண்டிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் வீடுகள்: அவர்கள் அரசின் மானியங்களுடன் 1 மில்லியன் பவுண்டு மதிப்பில் இந்த குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்ய உள்ளனர். இந்த ஒப்பந்தம் சரியான விலையில் நகரில் வீடுகள் கிடைப்பதை உறுதி செய்யும்..
கடந்த சில ஆண்டுகளாகவே பிரிட்டன் மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் முக்கிய நகரங்களில் சரியான விலையில் வீடுகள் கிடைப்பது என்பது சிக்கலாக மாறி வருகிறது. கொரோனாவுக்கு பிறகு நிலைமை மோசமடைந்தது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் ஏழைகள் மேலும் ஏழையான போதிலும், பணக்காரர்களிடம் செல்வம் குவிந்தது.
என்ன பிரச்சினை: இதனால் பெரும் பணக்காரர்கள் அதிகளவில் குடியிருப்புகளை வாங்கினார்கள். பலருக்கும் குடியிருக்க வீடு என்பதே கிடைக்காமல் இருந்த நிலையில், இந்த பெரும் பணக்காரர்கள் விடுமுறையைக் கழிக்க, விருந்தினருக்குத் தனியாக எனக் குடியிருப்புகளை வாங்குவதே பற்றாக்குறைக்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினை தான் பிரிட்டனிலும் ஏற்பட்டுள்ளது.
லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் நகரங்களில் குடியிருப்புக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் வீடுகளின் மதிப்பு மளமளவென உயர்ந்துள்ளது. இங்கே வீட்டை வாங்குவது மட்டுமின்றி வீடுகளின் வாடகையும் கடந்த சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஏழைகளுக்கு வீடுகள்: இதன் காரணமாகவே கார்ன்வால் கவுன்சில் இந்த குடியிருப்புகளை ஒரு பவுண்டிற்கு விற்பனை செய்துள்ளது. இந்த குடியிருப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுச் சரியான விலையில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த குடியிருப்புகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்திருந்தால் அதன் மதிப்பு அதிகமாக இருக்கும் என்ற போதிலும், அப்போது அது ஏழைகளுக்குக் கிடைக்காது என்றும் கார்ன்வால் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications