‛‛சாமியாரின் காலடி மண்ணுக்கு போட்டி’’.. ஹத்ராஸ் நெரிசலில் 116 பேர் பலியானது எப்படி? அதிர்ச்சி தகவல்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நேற்று நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? 116 பேரின் உயிர்போக என்ன காரணம்? என்பது பற்றிய கண்கலங்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஏராளமான சாமியார்கள், மடாதிபதிகள் உள்ளன. அவர்களில் ஒருவர் தான் போலோ பாபா என்ற நாராயண் ஹரி. இவர் தன்னை சாமியார் என்று கூறி வருகிறார். இவரது ஆன்மிக சொற்பொழிவுகளை வழங்கி வருகிறார். உத்தர பிரதேசத்தில் போலோ பாபாவுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தான் போலோ பாபா சார்பில் ஹத்ராஸின் சிகட்ராரு பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்தில் நேற்று ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவரது உரையை கேட்க ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
அதாவது ஆன்மிக சொற்பொழிவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை என்பது லட்சத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் தான் ஆன்மிக நிகழ்ச்சி முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது துயர சம்பவம் நடந்துள்ளது. அதாவது பக்தர்களின் ஆன்மிக சொற்பொழிவை முடித்து சென்றபோது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி தான் 116 பேர் வரை பலியாகி உள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது. எப்படி ஒரே நேரத்தில் 116 பேர் பலியாகினர்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த கூட்ட நெரிசல் என்பது நேற்று மாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. ஆன்மிக சொற்பொழிவை முடித்துவிட்டு சாமியார் போலோ பாபா அங்கிருந்து புறப்பட்டார். இந்த வேளையில் அவரை பார்க்கவும், காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கவும், அவரது காலடி மண்ணை எடுக்கவும் ஏராளமானவர்கள் போட்டிப்போட்டு கொண்டு ஓடியுள்ளனர்.
ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் இப்படியாக ஓடியதால் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் கால்தவறி கீழே விழுந்துள்ளனர். அப்படி விழுந்தவர்களை மற்றவர்கள் மீட்காமல் சாமியாரை பார்க்க அவர்கள் மீது மிதித்து ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்தவர்கள் படுகாயமடைந்து இறந்துள்ளனர். மேலும் இந்த சமயத்தில் அருகே உள்ள கால்வாயில் இருந்து தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சில இடங்களில் சகதியாக மாறியுள்ளன. இதிலும் கால்தவறி பலரும் விழுந்து கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர்.
இதுபற்றி உத்தர பிரதேச மாநில தலைமை செயலாளர் மனோஜ் குமார் சிங் கூறுகையில், ‛‛கூட்ட நெரிசலுக்கு அதிகமான பக்தர்கள் வந்தது தான் காரணம். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் 80 ஆயிரம் பேர் வருவார்கள் என்று அனுமதி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் பக்தர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது'' என்றார். இத்தகைய சூழலில் தான் அந்த நிகழ்ச்சியில் கூடியவர்களின் எண்ணிக்கை என்பது 2.5 லட்சம் வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தனை லட்சம் பேர் கூடிய நிலையில் அங்கு போதுமான ஏற்பாடுகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 116 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications