உ.பி ஹத்ராஸில் சாமியார் பிரசங்க நிகழ்ச்சியில் பயங்கர கூட்ட நெரிசல்.. பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்ச்சியில் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 40 பேர் பெண்கள். கூட்ட நெரிசலில் சிக்கிய மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உ.பி. சாமியார் பிரசங்க நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உ.பி. மாநிலம் ஹத்ராஸில் ஃபுல்லெரா என்ற கிராமத்தில் போலோ பாபா என்ற சாமியார் பிரசங்கம் நிகழ்த்தினார். மானவ் மங்கள் மிலான் சத்பவன சமாகன் குழு என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரசங்கம் முடிவடைந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் நகரவே முடியாத அளவுக்கு பல நூறு வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்த நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்களை வைக்கவும் முடியாமல் அரசு மருத்துவமனைகள் திணறுகின்றன. அத்துடன் 150க்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் அம்மருத்துவமனைகளில் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு உடனடியாக செல்ல முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மேலும் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications