13 வயது சிறுமிக்கு கன்னித்தன்மை சோதனை.. மதரசா பள்ளியில் நடந்த கொடூரம்.. அதிர்ந்த உத்தர பிரதேசம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 13 வயது நிரம்பிய 8 ம் வகுப்பு மாணவியை சேர்க்க வேண்டும் என்றால் அவருக்கு கன்னித்தன்மை சோதனையை மேற்கொண்டு அதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று மதரசா பள்ளியின் ஊழியர் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவின் சண்டிகரை சேர்ந்தவர் நஸ்ரூதீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது குடும்பத்துடன் உத்தர பிரதேச மாநிலம் மொரடாபாத்தில் வசித்து வருகிறார். நஸ்ரூதீனுக்கு 13 வயதில் மகள் உள்ளார். இவர் 8 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தான் மதரசா பள்ளியில் அந்த சிறுமி சொல்லாமல் விடுப்பு எடுத்தார். நீண்டகாலமாக அவர் மதரசா பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து நஸ்ரூதீன் தனது மகளை அழைத்து கொண்டு மதரசா பள்ளிக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் மாணவியை சேர்த்து கொள்ள மறுத்துள்ளனர். அதுமட்டுமின்றி நீண்டகாலமாக மதரசா பள்ளிக்கு ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்டு சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். அதுமட்டுமின்றி மாணவியின் நடத்தையை சந்தேகப்பட்டு, அவரது கன்னித்தன்மையை நிரூபிக்கும் பரிசோதனையை செய்து அதற்கான ரிசல்ட்டை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி நஸ்ரூதீன் கூறுகையில்,‛‛ஜமியா இஷானுல் பனாட் பெண்கள் மதரசா பள்ளி நிர்வாகம் என் மகளின் நடத்தையை அவமானப்படுத்தி உள்ளது. அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேகம் கிளப்புகிறது. அவரது படிப்புக்கு இடையூறு செய்யும் வகையில் அவரை சேர்க்க மறுக்கிறது.
என் மகளை மீண்டும் சேர்த்து கொள்வதற்காக ரூ.500 கூடுதலாக கட்டணம் செலுத்தினேன். ஆனால் அவர்கள் சேர்க்காமல் உள்ளதோடு, மாற்று சான்று தரவில்லை. கட்டிய கட்டணத்தையும் திரும்ப தரவில்லை. என் மகள் அழுகிறார். அவளுக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக சொல்கிறார். நியாயம் கிடைக்க வேண்டும்'' என்றார்.
மேலும் மாணவிக்கு மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகளின் பெயரில் கன்னித்தன்மை பரிசோதனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ஆதாரமாக வைத்து நஸ்ரூதீன் போலீசில் புகார் செய்தார்.
இதுபற்றி எஸ்பி குமார் விஜய் சிங் கூறுகையில், ‛‛மதரசா பள்ளியின் அட்மிஷன் பொறுப்பாளர் ஷாஜகான், முதல்வர் ரஹ்னுமா மற்றும் பிற ஊழிர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது விசாரணையில் கன்னித்தன்மை தொடர்பான புகார் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது'' என்றார்.
அதேவேளையில் இந்த குற்றச்சாட்டை மதரசாவில் பணியாற்றி வரும் ஆசிரியர் முகமது சல்மான் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது அடிப்படை ஆதாரமற்றது. 100க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் மதரசாவிற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்த புகார் செய்யப்பட்டுள்ளது. கன்னித்தன்மை பரிசோதனை தொடர்பான சான்றிதழ் எந்த மாணவியிடமும் கேட்கவில்லை'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications