'குக்கர்' வெடிகுண்டு, மிக பெரிய தாக்குதலுக்கு பிளான்.. உ.பி.-இல் 2 அல் கொய்தா பயங்கரவாதிகள் கைது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்த அல் கொய்தா பயங்கரவாதிகள் தீட்டியிருந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ மற்றும் மாநிலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தலைநகர் லன்கோவில் பதுங்கியிருந்த இரண்டு அல் கொய்தா பயங்கரவாதிகளை உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கைது மசீருதீன் மற்றும் மின்ஹாஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலிருந்து குக்கர் வெடிகுண்டும் பல கிலோ வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லக்னோவில் மக்கல் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மிகப் பெரிய குண்டுவெடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என போலீசார் குறிப்பிட்டனர். மேலும், அவர்கள் பாகிஸ்தானிலுள்ள அல் கொய்தா பயங்கரவாதிகளுடன் டெலிகிராம் தளத்தின் மூலம் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் கூறுகையில், " உத்தரப் பிரதேசத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஒரு மாபெரும் பயங்கரவாத திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
அல் கொய்தாவின் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது." என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications