தமிழ் கற்கும் உத்தரப் பிரதேச மாணவர்கள்.. மொழி அரசியலை ஒழிக்க வேண்டும்! அண்ணாமலை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காசி தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி, கடந்த டிச.2ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, "மொழி அரசியலை ஒழிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
நிகழ்வில் அவர் பேசியதாவது, "இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் 'தமிழ் கற்காலம்' என்கிற மையக்கருத்தின் அடிப்படையில் நடக்கிறது. நாம் மொழி அரசியலை ஒழிக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 1000 மாணவர்கள் தமிழகம் வந்து சிறு சிறு தமிழ் வார்த்தைகளை கற்க உள்ளனர். இம்மாநில மக்கள் நம்மை சகோதரர்களாக பார்க்கிறார்கள். இது குறித்த புரிதல் சிலருக்கு இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "இன்றைய தினம், காசிக்கும், தமிழகத்திற்கும் இடையில் உள்ள தொன்மையான உறவுப் பிணைப்பை கொண்டாடும் மாபெரும் திருவிழாவான காசி தமிழ் சங்கமம் 4.O நிகழ்வில் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளுடன் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சீர்மிகு சிந்தனையால் நமது பெருமைமிகு தமிழ் கலாச்சாரம் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சிறப்பான நிர்வாகத்தாலும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் முயற்சியாலும், இன்று எல்லைகள் கடந்து, தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, காசியின் அடிமுடிவற்ற ஆன்மீக நெறியையும், தமிழகத்தின் செழிப்புமிகு கலாச்சாரத்தையும் இணைக்கும் பாலமாக நடைபெறுகிறது. 'தமிழ் கற்கலாம்' என்ற முன்னெடுப்பின் மூலம், உத்தரபிரதேச மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து நமது கலாச்சார பொக்கிஷங்களை கண்டு, நமது தமிழ் மொழியை கற்க இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஐஐடி மெட்ராஸ் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் மேற்கொள்கின்றன.
மொழி ஒருங்கிணைக்கும், பிரிவினை பார்க்காது. வாரணாசியில் உள்ள மாணவர்கள் தமிழை கற்பதன் மூலமும், மதுரையில் உள்ள மாணவர்கள் காசியின் ஞானத்தை பெறுவதன் மூலமும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு மேலும் வலிமையடையும். இதன் மூலம், நமது முன்னோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாளைய இந்தியாவை உருவாக்குவோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications