கமலா என பெயர் மாற்றம்! காவி உடையுடன் கும்பமேளாவில் பங்கேற்கும் 'ஆப்பிள்' ஸ்டீவ் ஜாப்சின் மனைவி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மகா கும்பமேளா ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆப்பிள் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்சின் மனைவியும் கும்பமேளாவில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு நடைபெறுவது 144-வது மகா கும்பமேளா என்பதால் கூடுதல் சிறப்பை பெற்றிருக்கிறது. 45 நாட்கள் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கும்பமேளாவிற்கு வருகை தர உள்ளனர்.
இதனால், கும்பமேளாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உலக நாடுகளில் உள்ள சில முக்கிய பிரமுகர்களும் கும்பமேளாவில் கலந்து கொள்கிறார்கள். ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் மனைவி லாரன் பாவெல், நேற்று பிரயாக்ராஜ் நகருக்கு வந்துவிட்டார். அவர் இந்த விழாவுக்காக விரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி தனது பெயரையும் கமலா என மாற்றிக் கொண்டுள்ளாராம்.. இந்த பெயரை அவரது குரு சுவாமி கைலாஷ்னாத் கிரி வைத்துள்ளார். தனது குருவான சுவாமி கைலாஷ்னாத் கிரி ஆஷ்ரமத்திற்கு கடந்த சனிக்கிழமையே அவர் வந்துவிட்டார். வரும் 15 ஆம் தேதி வரை முகாமில் தங்கியிருக்கும் லாரன்ஸ் பவல் ஜாப்ஸ் பிறகு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த நாட்டிற்கு செல்ல உள்ளார்.
மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக 40 பேர் கொண்ட குழுவுடன் வந்த ஸ்டீவ் ஜாப்சின் மனைவி, நேற்று மதிய கும்பமேளா நடைபெறும் பகுதிக்கு சென்றார். காவி உடை அணிந்து கழுத்தில் ருத்ராட்சை மாலையுடன் முகாமுற்கு அவர் வருகை தந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விரதம் இருந்து வரும் கமலா, சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வருகிறாராம். அதுவும் வெங்காயம், பூண்டு மற்றும் காரம் நிறைந்த உணவுகளையும் தவிர்த்து வரும் அவர் புனித துறவிகளின் ஆன்மீக உரைகளை கேட்டு வருகிறாராம்.
வெறும் தரையில் படுத்து உறங்கி எளிமையான வாழ்க்கை முறையையும் கையாண்டு வருகிறார். இனிப்பு மற்றும் பழ வகை உணவுகளையும் தவிர்த்து இருக்கிறாராம். 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் மகா கும்பமேளா விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தர பிரதேச அரசு செய்துள்ளது. 45 ஆயிரம் போலீசாருடன், ஊர்க்காவல் படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செயற்கை தொழில் நுட்ப உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளன. இது தவிர பல்வேறு மாநில அரசுகளும், கும்பமேளாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளை செய்துள்ளன. உத்தர பிரதேசத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மகா கும்பமேளாவில் வெளிநாட்டு பக்தர்களும் பலர் கலந்து கொண்டு புனித நீராடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications