ஆஹா.. உபி-இல் பாஜகவுக்கு தலைவலி! ராஜ்புத் சமூகம் எடுத்த முடிவால் பெரிய சிக்கல்! கையை பிசையும் தலைகள்
லக்னோ: லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், திடீரென ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். இது அவர்களுக்கு மிகப் பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது.
லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்கும் நிலையில், பாஜக வலுவாக இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே அவர்களுக்கு மிகப் பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

அங்குள்ள இரு முக்கிய பாஜக பிரமுகர்களான சங்கீத் சோம் மற்றும் சஞ்சீவ் பல்யான் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு மிகப் பெரிய சிக்கலாக மாற வாய்ப்புகள் அதிகம். இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
ராஜ்புத் சமூகத்தினர்: மேற்கு உத்தரப் பிரதேசத்தைப் பலரும் ஜாட் அல்லது குஜ்ஜார் பெல்ட் என்றே நினைப்பார்கள். ஆனால், உண்மையில் இங்கு ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமாக வசிக்கிறார்கள். மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா ராஜ்புத் சமூகம் குறித்துக் கூறிய கருத்துக்கள் இங்கு மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
முஸ்லிம்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகளுக்குப் பிறகு, மேற்கு உத்தர பிரதேச பகுதியில் ராஜ்புத் சமூகத்தினர் தனிப்பெரும் சமூகமாக உள்ளனர்.. குறிப்பாகக் கவுதம் புத் நகர், காசியாபாத், சஹாரன்பூர், மீரட், கைரானா, முசாபர்நகர், பாக்பத், பிஜ்னோர், நாகினா, அம்ரோஹா, மொராதாபாத், சம்பல், அலிகார், ஹத்ராஸ், அலிகர் , ஆக்ரா மற்றும் ஃபதேபூர் சிக்ரி பகுதியில் ராஜ்புத் இனத்தவர் அதிகம். அங்குள்ள வாக்காளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
சிக்கல் என்ன: கடந்த காலங்களில் ராஜ்புத் இனத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதும் பாஜகவுக்கே விசுவாசமாக இருந்துள்ளனர். ஆனால், ராஜ்புத் இனத்தவருக்கு பாஜக தொடர்ந்து குறைந்த சீட் வழங்கியதால் அவர்கள் சற்று அதிருப்தியில் இருந்தனர். கடந்த முறை காஜியாபாத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனரல் வி.கே.சிங் மட்டும் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இந்த முறை அவருக்கு சீட் மறுக்கப்பட்டு பனியா சமூகத்தைச் சேர்ந்த ஏ.கே.கார்க் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது ராஜ்புத் சமூகத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உட்கட்சி மோதல்: இந்த நேரத்தில் தான் அங்கு பாஜகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.. ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த சோம் மற்றும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சய் பால்யன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜாட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு சஞ்சீவ் பல்யான் தங்களைப் புறக்கணித்துவிட்டார் என்பதே ராஜ்புத் சமூகத்தினரைச் சேர்ந்த குற்றச்சாட்டாக இருக்கிறது. இதன் காரணமாகவே அவர் வாக்கு சேகரிக்கச் சென்ற போது 24 ராஜ்புத் கிராமங்களில் அவரை உள்ளே நுழையக் கூட அனுமதிக்கவில்லை. அவர் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. ஆனால், இதற்குப் பின்னணியில் சங்கீத் சோம் இருக்கிறார் என்பதே பல்யானின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
எதிர்ப்பு: முசாபர்நகரில் ராஜ்புத் இனத்தவர் மக்கள்தொகை எட்டு சதவீதமாக இருக்கிறது. அவர்கள் பாஜகவைப் புறக்கணித்தால் அது ஆளும் தரப்பிற்கு மிக பெரிய அடியாக இருக்கும். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்புத் சமூகத்தினர், "மற்ற சமூகத்தினர் அவர்களுக்கு உரியப் பிரதிநிதித்துவத்தை அதிகம் பெறுகிறார்களா இல்லையா என்பது எங்கள் பிரச்சினை இல்லை. ஆனால், எங்கள் சமூகத்திற்கு உரியப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். போகும் போக்கை பார்த்தால் அது கூட கிடைக்காது என்றே தெரிகிறது. ஜெனரல் வி.கே.சிங்கை கூட நீக்கிவிட்டார்கள்" என்கிறார்கள்.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பரவலாக இதேபோன்ற மனநிலையே ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய ராணுவத்திற்குப் பல ஆயிரம் பேரை அனுப்பும் இந்தியாவின் சிப்பாய் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சதா சௌராசியின் (ராஜ்புத்களின் 144 கிராமங்கள்) கூட பாஜகவுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக பாஜகவுக்கே ஆதரவு அளித்து வந்துள்ளனர். ஆனால், அக்னிபாத் திட்டம், பொருளாதார இட ஒதுக்கீட்டில் புறக்கணிப்பது, தேர்தலில் உரிய சீட் இல்லை எனப் பல காரணங்களைச் சொல்லி இவர்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர்.
என்ன நடக்கும்: சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை இதனால் தங்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதே இவர்கள் புகார். ராஜ்புத் சமூகத்தினர் புறக்கணித்தால் அது மிகப் பெரிய அடியாக இருக்கும் என்பதை உணர்ந்த பாஜகவினர் அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்புத் சமூகத்தினர் இருக்கும் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்தினார். உபி முதல்வரும் கூட இதேபோன்ற கூட்டங்களை நடத்த இருக்கிறார். இருப்பினும், அதற்குப் பலன் கிடைக்குமா என்பதைப் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications