பத்திரிகையாளரும் பலி.. யோகிக்கு கூடும் சிக்கல்.. லக்கிம்பூர் கலவரத்தில் பலி எண்ணிக்கை 9 ஆனது
பாஜக ஆளும் உபியில் நடந்த கலவரத்தில் பத்திரிகையாளர் ஒருவரும் பலியானார்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணித்த பகுதியில் பாஜகவினர் கார் மோதி விவசாயிகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்த கலவரத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.. இதையடுத்து உயிர்பலி 9 ஆக உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு வருடங்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன..
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

கருப்பு கொடி
இந்நிலையில், லக்கிம்பூர் கேரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருந்தது. இதில் உபி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார்... ஆனால், பாஜக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

வேளாண் சட்டங்கள்
லக்கிம்பூர் உட்பட அக்கம்பக்கம் கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் திரண்டு நின்றிருந்தனர்... துணை முதல்வர் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர்...

வன்முறை
அப்போது விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கொஞ்ச நேரத்தில் இது வன்முறையாக மாறியது.... இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்... இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர்... இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.. இது உபியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

விளக்கம்
இதனிடையே, சம்பவ இடத்தில் தனது மகன் இல்லை என்று மிஷ்ரா விளக்கம் அளித்தும் அதை யாரும் ஏற்க தயாராக இல்லை.. இந்த வன்முறை சம்பவத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்... இதற்காக பல்வேறு தலைவர்களும் இன்று சம்பவ இடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் லக்கிம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்
இதனிடையே, நடந்த கலவரத்தில் பத்திரிகையாளர் ஒருவரும் படுகாயமடைந்திருந்தார்.. உடம்பெல்லாம் ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. டாக்டர்களும் அவருக்கு தீவிரமான சிகிச்சை தந்து வந்த நிலையில், பலனளிக்காமல் பத்திரிக்கையாளர் இன்று இறந்துவிட்டார்.. இதையடுத்து, வன்முறை கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

கொந்தளிப்பு
அடுத்தடுத்த உயிரிழப்புகள் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தல்கள் வெடித்துள்ளன.. இதே கருத்தை வலியுறுத்திய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.. லக்கிம்பூர் பகுதி 144 தடை உத்தரவு கட்டுப்பாட்டில் உள்ளதால் பதற்றம் சூழ்ந்து காணப்படுகிறது.. விரைவில் உபியில் தேர்தல் வர உள்ள நிலையில், இதற்காக பிரியங்கா காந்தி ஒரு வருடமாகவே அங்கு தீவிர களப்பணியாற்றி வரும் நிலையில், யோகி அரசுக்கு நெருக்கடி கூடி வருகிறது.












Click it and Unblock the Notifications