இதுகூடத் தெரியாதா.. 10 ரூபாயால் மாட்டிய மாப்பிள்ளை.. திருமணத்தையே நிறுத்திய மணமகள்!
மணமகன் படிக்காதவர் என்பதைக் கண்டுபிடித்து, கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தியுள்ளார் உத்தரப்பிரதேசத்தில் மணமகள் ஒருவர்.
லக்னோ: சாமர்த்தியமாகச் செயல்பட்டு, மாப்பிள்ளை படிக்காதவர் என்பதைக் கண்டுபிடித்து, நடக்க இருந்த தனது திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புத்திசாலி மணமகள் ஒருவர்.
திருமணம் சரியாக நடந்து முடிவது என்பது அவ்வளவு சுலபமானது இல்லை. அதனால்தான், வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள். சம்பந்தமே இல்லாமல், 'மாப்பிள்ளை சொம்பு தந்தால்தான் தாலி கட்டுவேன் என அடம் பிடிக்கிறார்' என பிரச்சினை செய்வதற்கென்றே திருமணத்தில் பல உறவுகள் இருக்கும். அவர்களை எல்லாம் மீறி திருமணத்தை முடிப்பதற்குள் மாப்பிள்ளையும், மணமகளும் ஒரு வழி ஆகி விடுவார்கள்.
சில திருமணங்களில் உறவினர்களால் பிரச்சினை என்றால், வேறு சில திருமணங்களிலோ மாப்பிள்ளை அல்லது மணமகளே திருமணம் நிற்பதற்கு காரணமாகி விடுவார்கள். அதுவும் வடமாநிலங்களில் திருமணம் நிற்பதற்கான காரணங்கள் விதவிதமாய், சமயங்களில் மிகவும் வேடிக்கையாகவும்கூட இருக்கும்.
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் நல்ல மழை இருக்கு.. எந்த மாவட்டங்களில் தெரியுமா! வானிலை மையம் தகவல்
இப்போது உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ள சம்பவமும் அப்படிப்பட்டதுதான். மாப்பிள்ளை படிக்காதவர் என்பதை வித்தியாசமான முறையில் டெஸ்ட் வைத்து சோதித்து, திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார் புத்திசாலி மணமகள் ஒருவர்.
திருமண ஏற்பாடு
உத்தரப்பிரதேச மாநிலம் பருக்காபாத் மாவட்டத்தில் உள்ளது தொல்காப்பூர் என்கிற கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த ரீட்டா சென் என்ற 21 வயது பெண்ணுக்கு சமீபத்தில் வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கொத்தவாளி பகுதியில் கடந்த 19ம் தேதி திருமணத்திற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்திருக்கின்றன.
மணமகளின் சந்தேகம்
திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த போதும், ரீட்டாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே மணமகனின் நடந்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. நன்கு படித்து வேலைக்குச் செல்லும் பெண்ணான ரீட்டா, தனக்கு கணவராக வருபவரும் தன்னைப் போலவே படித்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது வருங்கால கணவரின் நடவடிக்கைகளோ படித்தவர் போல் இல்லை என்பது ரீட்டாவின் சந்தேகம்.
மாப்பிள்ளை ஊர்வலம்
இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் திருமண சடங்குகளில் மாப்பிள்ளை குதிரையில் ஏறி ஊர்வலமாக சென்றுள்ளார். அப்போதும் மணமகனின் நடவடிக்கைகளில் மணமகள் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாப்பிள்ளை வீட்டார் பொய் சொல்லி இந்த திருமணத்தை நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் அவர்களுக்கு வலுக்கவே, அதனை தெளிவு பெற்றுவிட வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மணமகள் வைத்த டெஸ்ட்
அதனைத் தொடர்ந்து, திருமணத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதரிடம், 30 நோட்டுகள் இருந்த பத்து ரூபாய் பணக்கட்டைக் கொடுத்து, அதை மணமகனிடம் எண்ணிப் பார்த்து சரி பார்த்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். புரோகிதரும் அவ்வாறே செய்திருக்கிறார். அங்கு தான் மணமகனின் நீலச்சாயம் வெளுத்துப் போனது.
காட்டிக் கொடுத்த காசு
புரோகிதர் கொடுத்த 30 நோட்டுகளையே அவரால் சரிவர எண்ண முடியவில்லை. மணமகன் பணத்தை எண்ண தடுமாறுவதைப் பார்த்து, மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் மூலம் மணமகன் கொஞ்சம்கூட படிக்காதவர் என்பது உறுதியானது. இதனால் கோபமான மணமகள், 'இந்த மாப்பிள்ளையே தனக்கு வேண்டாம்' என திருமணத்தையே நிறுத்தி விட்டார்.
போலீசில் புகார்
இந்த விவகாரத்தில் போலீசார் தலையிட்டு, இருதரப்பையும் சமாதானம் செய்ய முற்பட்டனர். ஆனால் மணமகள் பிடிவாதமாக, அந்நபரை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். அதோடு தங்களை ஏமாற்றி விட்டதாக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீதும் அவர் போலீசில் புகார் அளித்தார்.
குவியும் பாராட்டு
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் மணமகன் படிப்பறிவில்லாதவர் மட்டுமல்ல, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. புத்திசாலித்தனமாக செயல்பட்டு மாப்பிள்ளையின் அறிவைச் சோதித்துப் பார்த்து, உடனடியாக திருமணத்தை நிறுத்திய மணமகள் வீட்டாரின் செயலை அவரது உறவினர்கள் பாராட்டி வருகின்றனர்.