உத்தரப் பிரதேசத்தில் நிலையான வளர்ச்சி! விரைவில் இலக்குகளை அடைவோம் என யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: உத்தரப் பிரதேசம் திட்டமிடப்பட்ட பாதையில் நிலையான வளர்ச்சியை கொண்டிருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் எதிர் வரும் 2030ம் ஆண்டுக்குள் நிர்ணயிக்கப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய உத்தரப் பிரதேச அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசம் திட்டமிடப்பட்ட பாதையில் நிலையான வளர்ச்சியை கொண்டிருப்பதாக" கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "மக்கள், செழிப்பு, அமைதி, கூட்டாண்மை ஆகியவற்றில் வளர்ச்சியை அடைவதற்காக ஏற்கெனவே சில இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த இலக்குகளில் அடிப்படையில் எதிர்பார்த்த அளவுக்கான வளர்ச்சி இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 3.43 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
வறுமையை ஒழிப்பதில் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. மாநில அரசு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின் ஜன் ஆரோக்கிய யோஜனா ஆகியவற்றின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது. அதேபோல உத்தரப் பிரதேசத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் கொண்டு சேர்ப்பது என்பது சாத்தியமில்லாததாக இருந்தது. ஆனால் பாஜக அரசு அதை சாத்தியப்படுத்தி வருகிறது.
2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் நீர் வழங்குவதற்கு மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. அதேபோல குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் உத்தரப் பிரதேசத்தின் உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்திட ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications