பாஜக தலைவருக்கு நோஸ்கட்.. பைபிள் கொடுப்பது மதமாற்றம் அல்ல! 2 கிறிஸ்துவர்களுக்கு உபி ஐகோர்டில் ஜாமீன்
லக்னோ: உத்தரப் பிரதேச மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் புனித பைபிளை விநியோகிப்பது மற்றும் நல்ல போதனைகளை வழங்குவதை மத மாற்றம் முயற்சி என்று கருத முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு கூறியுள்ளது.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி தங்கள் மதத்தினரிடையே பிரச்சாரம் செய்யும் கிறிஸ்துவ, இஸ்லாமிய மதபோதகர்கள் மீதும் புகாரளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்த நிலையில்தால் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகங்களை சேர்ந்த மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக 2 கிறிஸ்துவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜோஷ் பப்பாச்சென் மற்றும் ஷீஜா ஆகிய இருவரும் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக குற்றம்சாட்டினார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அதன் பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் தரப்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் இருவரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
ஜோஷ் பப்பாச்சென் மற்றும் ஷீஜாவின் மேல்முறையீட்டு மனு நீதிபதி ஷமீம் அகமது அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, "கற்பித்தல், போதனைகளை வழங்குதல், புனித பைபிளை விநியோகித்தல், குழந்தைகள் கல்வி பெற ஊக்குவித்தல், கிராமப்புற மக்கள் சபையை ஏற்பாடு செய்தல் மற்றும் மத சடங்குகளை நடத்துதல், கிராமப்புற மக்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்த்து வைத்தல், மது அருந்த வேண்டாம் என போதித்தல் போன்றவை 2021 ஆம் ஆண்டு மதமமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதமாற்றம் முயற்சியாக கருதப்படாது." என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்த சட்டத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் அல்லது அவரது குடும்பத்தினர் மட்டுமே வழக்கு தொடர முடியும் என்றும், முகம் தெரியாத மூன்றாவது நபர் புகாரளிக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்து இருவருக்கும் ஜாமீன் அளித்து இருக்கிறார்.
மதமாற்ற முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த ஜோஷ் பப்பாச்சென் மற்றும் ஷீஜா ஆகியோர் அப்பாவிவிகள் என்றும் அரசியல் பகை காரணமாக அவர்கள் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பில் வாதிட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications