தலைக்கேறிய போதை.. மணமகளுக்கு பதில் மாலையை மாற்றி போட்ட மாப்பிள்ளை.. இனி மறக்கவே மாட்டார்
லக்னோ: தலைக்கேறிய போதையில் மணமகள் கழுத்தில் மாலை அணிவிப்பதற்கு பதில் பக்கத்தில் இருந்தவரின் கழுத்தில் மாலையை போட்டதால் இளைஞரின் திருமணம் நின்றது. இந்நேரம் திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்ல வேண்டிய அந்த மணமகன் மீது இப்போது வரதட்சணை கொடுமை வழக்கு பாய்ந்துள்ளது. அதோடு அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இவர்களின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. திருமண நாள் நெருங்கியது. இதையடுத்து மணமகன் ரவீந்திர குமார் மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
பரேலி அருகே குளோடியா போலீஸ் எல்லைக்குட்பட்ட பரிகிடா பகுதிக்கு ஊர்வலம் வந்தது. அங்கு மணப்பெண்ணும் வந்தார். இதையடுத்து திருமணத்துக்கான சடங்குகள் நடத்தப்பட்டது. இந்த சமயத்தில் மணமகன் ரவீந்திர குமார் மதுபானம் அருந்தி இருந்தார். போதை தலைக்கேறிய நிலையில் அவர் தடுமாறினார். திருமண சடங்கின் ஒருபகுதியாக மணமகன், மணமகளுக்கும், மணமகள், மணமகனுக்கும் மாலை அணிவிக்கும் சம்பிரதாயம் நடந்தது.
அப்போது போதையில் இருந்த மணமகன் ரவீந்திர குமார் தனது மாலையை கழற்றி மணப்பெண்ணின் கழுத்தில் போட வேண்டும். ஆனால் போதையில் இருந்த அவர் மணப்பெண்ணின் கழுத்தில் போடுவதற்கு பதில் அருகே நின்ற நண்பனின் கழுத்தில் போட்டார். இதனால் அங்கு வந்திருந்த அனைவரும் சிரித்தனர். இதனால் கடும் கோபமடைந்த மணப்பெண், மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
அதோடு மணப்பெண் அங்கிருந்து வேகமாக சென்றார். ‛‛குடிகார மாப்பிள்ளை வேண்டாம். அவரை நான் திருமணம் செய்ய மாட்டேன்'' என்று கூறி மணப்பெண் வேகமாக வெளியே சென்றார். இதனால் அங்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணமகன் - மணமகள் குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சேர்கள் சேதப்படுத்தப்பட்டன. உணவுகள் தூக்கி வீசப்பட்டன. நிலைமை மோசமாகவே போலீசார் வந்து தலையிட்டு இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு மணமகள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மணமகனை போலீசார் கைது செய்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் மணமகன் குடும்பத்தினர் சார்பில் கூடுதல் வரதட்சணை கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மணமகன் ரவீந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications