திடீரென தீப்பிடித்து எரிந்த டெல்லி-டர்பங்கா ரயில்..ஸ்டேஷன் மாஸ்டரால் தப்பிய மக்கள்! திக்திக் சம்பவம்
லக்னோ: டெல்லியில் இருந்து பீகார் மாநிலம் டர்பங்காவுக்கு இன்று சிறப்பு ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வேளையில் ஸ்டேஷன் மாஸ்டர் செய்த ஒரு செயலால் 50க்கும் அதிகமான மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி மக்களின் வசதிக்காக நாடு முழுவதும் 300க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது தீபாவளி பண்டிகை முடிந்துள்ள நிலையில் மக்கள் சொந்த ஊரில் இருந்த தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு செல்லவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் டெல்லியில் இருந்து பீகார் மாநிலம் டர்பங்காவுக்கு சிறப்பு ரயில் (வண்டி 02570) இயக்கப்பட்டது.
இந்த ரயில் இன்று டெல்லியில் இருந்து டர்பங்காவுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. உத்தர பிரதேச மாநிலம் சாராய் போகத் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் எஸ் 1 முன்பதிவு பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. இதனை அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் பார்த்தார்.
உடனடியாக அவர் ரயிலை நிறுத்தினார். மேலும் எஸ் 1 பெட்டியில் இருந்து புகை கிளம்பியதை அவர் உடனடியாக லோகோ பைலட் மற்றும் பயணிகளுக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து எஸ்1 மற்றும் அதனையொட்டி பெட்டிகளில் இருக்கும் பயணிகள் அலறியடித்தபடி அவசர அவசரமாக வெளியேறினர். சிலர் ரயிலின் அவசர வாயில் வழியாக வெளியே குதித்தனர்.
இதற்கிடையே எஸ் 1 ரயில் பெட்டி முழுவதுமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ வேறு பெட்டிகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் மேலும் சில பெட்டிகளுக்கும் தீ பரவியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த ரயில் பெட்டி முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
ஆனாலும் ஸ்டேஷன் மாஸ்டர் அலர்ட் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.











Click it and Unblock the Notifications